districts

img

பழனி அடிவார மக்களின் வாழ்வாதாரம் காக்க ஓய்வு பெற்ற நீதிபதியிடம் கோரிக்கை மனு!

பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற  நீதிபதி பாரதிதாசனை சந்தித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் உள்ளிட்டோர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உட்பட்ட பழனி அடிவாரம், கிரிவலம் பாதை, சன்னதி வீதி, அய்யம்புள்ளி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் பக்தர்கள் அவதி அடைவதாக கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கின் அடிப்படையில் கிரிவலப் பாதையில் எந்த விதமான ஆக்கிரமிப்பு கடைகளும், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் எதுவும் இருக்கக் கூடாது உடனடியாக அகற்ற வேண்டும் கிரிவலப் பாதையில் எந்த விதமான வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்பட வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் குழு ஒன்றை அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு கடைகளை தொடர்ந்து முழுவதுமாக அகற்றப்பட்டு வந்தது.

இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், கடை வியாபாரிகள், சிறு குறு வியாபாரிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம்  அதாவது முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் தினங்களுக்கு முன்பு ”என் மண் என் உரிமை” என்று சாலையோர வியாபாரிகள் சார்பில் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு கொட்டும் மழையிலும் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பட்டம் செய்தனர்.

ஆக்கிரமிப்புகள் எடுக்கப்பட்ட நிலையில் அங்கு கடை வைத்திருந்தவர்கள் குடியிருந்தவர்களுக்கு தேவையான மாற்று ஏற்பாடுகளை செய்யாததால் வாழ்வாரத்தை இழந்து தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும் அவ்வப்போது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் செய்து  வந்தனர்.

இந்நிலையில், பழனி கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைத்த குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற  நீதிபதி பாரதிதாசனை சந்தித்து, பழனி அடிவார மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அன்றாட வாழ்வில் அவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்து குறித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இராஜமாணிக்கம் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர்  கந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கை இன்று மனுவை வழங்கினர்.