செங்கல்பட்டு, மே 13- அரசு கொள்முதல் நிலையங்கaளில் கோணி பற்றாக்குறையால் கொள்முதல் செய்யாத நிலையில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மீண்டும் மீண்டும் மழையில் நினைந்து வீனாகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 39 நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. கடந்த ஏப்ரல் 25ந் தேதி வரை 22.761 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கோணிப்பை தட்டுப்பாடு ஏற்பட்டதால் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நேரடி கொள்முதல் நிலையங்கள், சாலையோரங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ள நெல்லின் மீது தார்ப்பாய்கள் போர்த்தி இரவு பகலாக விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். குறிப்பாக, திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம், சிறுகுன்றம், அனுமந்தபுரம் ஆகிய கொள்முதல் நிலையங்களில் 30 ஆயிரம் நெல் மூட்டைகளும், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பொன்விளைந்த களத்தூர், கீரப்பாக்கம் ஆகிய இடங்களில் 20 ஆயிரம் மூட்டைகளும், மதுராந்தகம் ஒன்றியம் வேடந்தாங்கல், மொறப்பாக்கம், அகிலி, முனியந்தாங்கல், வெள்ளப்புத்தூர், வில்வராயநல்லூர், ஏர்ப்பாக்கம், முதுகரை, ஜமீன்புதூர், ஓணம்பாக்கம், எல்என்புரம், நெல்லி, வேடவாக்கம் ஆகிய கொள்முதல் நிலையங்களில் தலா 10 ஆயிரம் மூட்டைகளும், செய்யூர் வட்டத்தில் கன்னி மங்கலம், இந்தலூர், பெருக்கரணை, இரணிய சித்தி, பாலூர், கல்பட்டு ஆகிய கொள்முதல் நிலையங்களில் 60 ஆயிரம் மூட்டைகளும், கோணிப் பைகள் பற்றாக்குறையால் தேங்கிக் கிடக்கின்றது.
இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 26 மற்றும் மே 12 தேதிகளில் கோடை பெய்தது. இதில் நேரடி கொள்முதல் நிலையங்கள், சாலையோரங்களில் குவித்து வைத்திருந்த பல டன் நெல் மூட்டைகள், குவியல்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து, கடனை கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம், தேங்கிக்கிடக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.