districts

யாசகம் எடுத்த சிறுமிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

அரியலூர், பிப்.26 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். அப்போது சிறுமிகள் 3 பேர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த சுகாதார ஆய்வாளர் குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமிக்கு தகவல் அளித்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்தவர் சிறுமிகள்  மூவரையும் மீட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.  இதனையடுத்து குழந்தைகள் கடத்தல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி குழந்தைகளிடம் பெற்றோர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓங்கோல் மாவட்டம் மார்க்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏகபாபு ரமணா தம்பதியரின் மகள் சுப்புலட்சுமி (11), கிருஷ்ணமூர்த்தி - லட்சுமி தம்பதியரின் மகள் நந்தினி (11), சிவா - ஜோதி தம்பதியரின் மகள் ஸ்ரீஜா (8) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் விசாரித்த போது சிக்கு முடி வாங்கும் தொழிலாளிகளின் மகள்கள் என தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் பெற்றோர்கள் எங்கே என்று விசாரித்த போது, பெற்றோர்களின் போன் நம்பரை கொடுத்துள்ளனர்.  போனில் தொடர்பு கொண்டு அவர்கள் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரித்தனர். அப்போது அவர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் முடி வாங்கி தொழில் செய்து வருவதாக தெரிவித்தனர். மாதம் ஒரு முறை ஊருக்கு செல்வதாகவும் தங்களது கணவர்கள் ஆந்திராவில் இருப்பதாகவும் குழந்தைகளின் தாயார்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தைகள் மூவரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் உரிமை ஆணைய அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.