செங்கல்பட்டு, பிப்.4- செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் இடைக்கழிநாடு பேரூராட்சி அமைந்துள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகள் முழுவதுமே பனை, தென்னை, முந்திரி உள்ளிட்ட மரப் பயிர்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இப்பகுதியில் பனைத் தொழிலை நம்பி ஏராளமானோர் உள்ளனர் குறிப்பாக இப்பகுதியில் செயல்பட்டுவந்த கூட்டுறவு பதநீர் சாலை தற்போது செயல்படாமல் முடங்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள மரப்பயிர் களையும் பனைத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட காலமாக போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளரும் பனைத் தொழில் செய்துவரும் டி.கே.முத்து போட்டியிடுகிறார். இச்சூழ் நிலையில் பனை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தும் விதமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் சிபிஎம் வேட்பாளர் டி.கே.முத்து மரமேறும் தொழிலாளி யாகவே சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன் வட்டச்செயலாளர் எஸ்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.