districts

img

மதுரை மக்களின் ரோசாப்பூத்துரை

மதுரை மக்களால் ரோசாப்பூ துரை என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட, மகாத்மா காந்தியின் உற்ற நண்பரும்  விடுதலை போராட்ட வீரரும், சமூகப் போராளியுமான ஜார்ஜ் ஜோசப்பின் நினைவு தினம் இன்று மார்ச் 5. கேரள மாநிலம் செங்கானூரில் 1887-இல்  பெரும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் ஜார்ஜ்  ஜோசப். சிறு வயதிலயே கல்வியில் சிறந்து விளங்கி யவர், பட்டப்படிப்பை சென்னை கிறிஸ்துவக் கல்லூரி யில் முடித்து, சட்டப்படிப்புக்கு லண்டனுக்கு சென்று அங்கு பாரிஸ்டர் பட்டம் பெற்ற நேரத்தில்தான் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. தான் படித்த சட்டப்படிப்பால் பிரிட்டிஷ் அரசிடம் கிடைத்த வேலை வாய்ப்பை உதறிவிட்டு தேச விடுதலைக்குப் பயன்படுத்துவேன் என்று முடிவு செய்து நாடு திரும்பினார். 1909-இல் மதுரையில் குடியேறி வழக்கறிஞ ராகவும் பத்திரிகையாளராகவும், பல்வேறு சமூக பிரச்னைகளுக்காகக் களத்தில் இறங்கி போராடவும் செய்தார்.  1918-இல் குற்றப்பரம்பரை கைரேகை சட்டத்தை பிரமலைக்கள்ளர், மறவர் போன்ற சமூக மக்களுக்கு எதிராக ஆங்கில அரசு கொண்டு வந்தபோது, அந்தச்  சமூகத்தைச் சேர்ந்த பலரும் எதிர்த்துக் கிளம்பாத சூழலில் அதை எதிர்த்த முன்னோடி உணர்வாளர் ஜார்ஜ் ஜோசப். பாதிக்கப்பட்ட அம்மக்களுக்கு சட்டப்  போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டார். இதன் காரண மாகவே தேனி, உசிலம்பட்டி , மதுரை போன்ற பகுதி களில் வசிக்கும் அந்த சமூக மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஜோசப் என்ற பெயரை தான் ரோசாப்பூ துரை, ரோசாப்பூ தேவர் போன்ற பெயர்களாக சூட்டினர் 1916-ஆம் ஆண்டில், ஜார்ஜ் ஜோசப் அன்னி பெசன்ட் அம்மையாரின் ஹோம் ரூல் இயக்கத்தில்  இணைந்தார் ஹோம்ரூல் இயக்கத்தில் மாண வர்கள் சேரக் கூடாது என்று ஆங்கில அரசு சட்டம் இயற்றியபோது துணிச்சலுடன் அதை எதிர்த்துப் போராடினார். அப்போது தான் சுயநிர்ணயக் கொள்கையில் இந்தியாவின் கருத்தைத் தெரி விக்கும் ஹோம்ரூல் இயக்கத்தின் குழுவில் இடம்பெறுமளவிற்கு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த இடத்திற்குச் சென்றார்.

இந்தக் கால கட்டத்தில்தான் மகாத்மா காந்தியடிகள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரையில் நூற்பாலைகளை ஆங்கிலேயர் நிறுவிய நேரத்தில் தொழிலாளர்கள் கொத்தடி மைகள் போல நடத்தப்பட்டனர். 1917-இல் ரஷ்யா வில் புரட்சி வெடித்து வெற்றி பெற்ற போது 1918 இல் , ஜார்ஜ் ஜோசப் ,ஜே.என்.ராமநாதனுடன் சேர்ந்து மதுரை மில் தொழிலாளர் சங்கம் அமைத்து கூலி உயர்வுக்கும், தொழிலாளர் உரிமைக்கும் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். 1919 மார்ச் 23இல் , ரவுலட் சட்டத்தை எதிர்த்து காந்தி தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். மார்ச் 26இல் ( 1919) அவர் மதுரை யில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில்தான் மார்ச் 30வரை தங்கியிருந்தார். 1920 ஏப்ரல் மாதம் நடந்த கல்கத்தா சிறப்பு மாநாட்டில் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் தேச சேவைக்காக , கல்லூரிப் படிப்பை கைவிட்டனர். பல மிகவும் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் , அன் றைய நாட்களிலேயே லட்சக்கணக்கில் வருமானம் தந்த தங்கள் தொழிலை கைவிட்டனர். இவர்களுள் ஜார்ஜ் ஜோசப்பும் ஒருவர். நேருவின் இன்டிபென்டன்ட், காந்தியின் யங் இந்தியன் உட்பட அப்போது வந்த ஐந்து முன்னணி நாளிதழ்களில் ஆசிரியர் மற்றும் கட்டுரையாளராக பணியாற்றினார். விடுதலைப் போராட்டம் பற்றியும், சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் பற்றியும் அழுத்த மான கட்டுரைகளை எழுதினார்.அந்த நாட்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து எழுதிய கட்டுரைக்கு மன்னிப்பு கேட்க மறுத்ததால் நேருவுடன் கைது செய்யப்பட்டு தேச துரோக வழக்கிற்காக 2வருடம் சிறையில் அடைக்கப்பட்டார்.  1924-ஆம் ஆண்டில், ஜார்ஜ் மீண்டும் சென்னை  திரும்பி, வைக்கம் அறப்போரில் தலைமை தாங்கி 6மாதம் சிறைவாசம் அனுபவித்தார்.  

தந்தை பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டபோது, இவரும் கலந்து கொண்டார்.  ‘கிறிஸ்துவரான இவர் ஏன் இந்து மத பிரச்னையில் தலையிட வேண்டும் என்று காங்கிரசிலுள்ள சனா தனவாதிகள் கேள்வி எழுப்பியபோது, ‘ தீண்டாமை என்பது மதத்தின் உள் பிரச்னை அல்ல. அரசியல் உரிமையை அனைத்து மக்களுக்கும் தர மறுக்கும் செயல், இது ஒரு மத பிரச்சனை மட்டுமல்ல. ரோட்டில் நடக்க உரிமை கோரும் பிரச்னை’ என்று ஜார்ஜ்  வாதிட்டார். இந்த போராட்டத்தில் ஜார்ஜ் முன்னிலை யில், இருந்தால் ,’ ஒரு கிருஸ்துவர் , ஹிந்துக்களின் மத விஷயங்களில் தலையிடுகிறார்’ என்ற விஷமப் பிரசாரத்திற்கு இடமளிக்கும் என்றும் அதனால், ஹிந்து தலைவர்களே , இதில் இடம் பெறவேண்டும்’ என்று காந்தி கருதினார். இது விஷயத்தில் இருவரும் சற்று மனத்தாங்கல் அடைந்தனர். இருப்பினும் காந்தி மதுரை வரும்போதெல்லாம் ஜார்ஜ் வீட்டில் தங்குவதை கைவிடவில்லை. மதுரை மாவட்டத்தில் விவசாயிகளின் வறுமை நிலையை பார்த்து காந்தி அரையாடைக்கு மாறும் போது உடனிருந்தவர் ஜார்ஜ் ஜோசப். அவர்தான் மக்களின் வறுமை நிலை, அவர்களின் ஆடைகள் சம்பந்தமாகவும் காந்தியிடம் எடுத்துக் கூறியவர். ஒரு வரலாற்று நிகழ்வுக்கு தூண்டுகோலாக இருந்தார் என்பது இங்கு நினைவு கூரத்தக்கது. 1933 ஆம் ஆண்டு விருதுநகர் சதி வழக்கில் காமராஜர் கைது செய்யப்பட்டபோது, அவர் சார்பாக  வாதிட்டு, குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபித்தார். 1925இல் இருந்து 1938இல் மறையும் வரை, ஜார்ஜ் அவர்கள் மதுரையில் தங்கியிருந்து , தேச பக்தர்களுக்கும் , சமூக நீதிப் போராளிகளுக்கும் உற்ற  துணையாக இருந்து பணியாற்றினார். சைமன் கமி ஷன் போராட்டத்திலும் பங்கேற்றார். இவரது இல்லத்  தில் தான் மகாகவி பாரதி , ஒருநாள் திடீர் ஆவேசம டைந்து , ‘கொட்டடா! கொட்டடா!’ எனத் துவங்கும்  “காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;” என்ற பாடலை பாடினார் என்று ஜார்ஜ் அவர்களின் துணைவியார் சூசன்னா நினைவு கூறியுள்ளார் . 1937ல் மதுரை-ராம்நாடு-திருநெல்வேலி தொகுதியிலிருந்து மத்திய சட்டசபை உறுப்பின ரானார்.

அச்சமயம் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு 1938 மார்ச் 5 ஆம் தேதி காலமானார். மதுரை கீழவாச லில் உள்ள புது நல்லமுத்துப் பிள்ளை ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு இன்றும் கள்ளர் சமூக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இவருடைய சிலை மதுரை யானைக்கல்லில் அப்போது அமைச்சராக இருந்த கக்கனால் அமைக்கப்பட்டது.  ஜார்ஜ் ஜோசப் என்னும் ரோசாப்பூ துரை மதரீதி யாக அணுகியிருந்தால் ஆங்கிலேயருக்கு இசைந்து சுகபோகமாய் வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் அப்படி அல்ல. மொழி, இனம், மதம் கடந்து சுதந்திர போராட்டத்திற்காகவும் , சமூக நீதிக்காகவும், மத  நல்லிணக்கத்திற்காகவும் தொடர்ந்து போராடிய வருக்கு அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட வேண்டும். அவருடைய நினைவு தினத்தை அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும் என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.  -ஜான் மைக்கேல், மாவட்ட துணைச்செயலாளர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு, மதுரை மாநகர்