திண்டுக்கல்,ஏப்.13- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் செவிலியர்களின்றி நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள் அவதிப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக திண்டுக்கல்லில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச்செயலாளர் ஜி.ராணி கூறியதாவது: ஏப்ரல் 7 உலக சுகாதார தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், மற்றும் அரசு மருத்துவமனைகளில் மாதர் சங்கம் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வறிக்கைகள் தொடர்பாக புதனன்று நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், ஒட்டன்சத்திரம்,வத்தலகுண்டு அரசு மருத்துவமனைகளில்,
கொசவபட்டி, பாலசமுத்திரம், கோவிலூர், சித்தையன்கோட்டை, புதுக்கோட்டை, கோபால்பட்டி,உலுப்பக்குடி, ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 5 துணை சுகாதார நிலையங்களிலும் என 19 ஆரம்ப சுகாதார நிலையங்களில், திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி நோயாளிகள், கர்ப்பணி பெண்கள், நோயுற்ற குழந்தைகள் அவதிப்படுகின்றனர். நத்தம் அரசு மருத்துவமனையில் 10- மருத்துவர்களுக்கு 4 மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். போதிய கட்டிட வசதி இல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் சமுதாய கூடத்தில் செயல்படுகின்றன. எக்ஸ்ரே எடுப்பதற்கு கூட ஆள் இல்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை. கோவிலூர், பெருமாள் கோவில் காலனி ஆகிய ஆரம்ப சுகாதமார நிலையங்களுக்கு கட்டட வசதி இல்லாமல் சமுதாயக்கூடத்தில் செயல்படுகின்றன. வாரந்தோறும் 50 முதல் 100 கர்ப்பிணிகள் வரை பரிசோதனைக்காக வருகிறார்கள். ஆனால் அவர்கள் அமர்வதற்கு கூட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இடம் இல்லை. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். குறைவான சம்பளத்துடன் நிரந்தரமற்ற வேலையுடன் பணியாற்றுகிறார்கள்.
சுகாதாரமான கழிப்பறை வசதி செய்திடுக
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் லிப்ட் வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளார்கள். மாற்றுத்திறனாளிகள் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. கோபால்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். நத்தம், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு ஆகிய அரசு மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து சிறிய மருத்துவமனகைளில் போதிய மருத்துவர்கள் நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள், மருத்துவர்கள் 24 மணிநேரமும் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் கழிவறைகள் அமைத்துத்தர வேண்டும். கழிவறைகளுக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தர வேண்டும். மோசமான கழிப்பறைகளை அகற்றிவிட்டு சுகாதாரமான கழிப்பறைகளை நோயாளிகளுக்கு செய்து தர வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான இருக்கை வசதிகள், குடிநீர் வசதிகள் செய்து தர வேண்டும். பேறுகால உதவி நிதி உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்தாண உணவுப்பொருட்கள் சிலருக்கு மட்டுமே கிடைக்கிற நிலையும் உள்ளது. மகப்பேறு கிப்ட் பலருக்கு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கர்ப்பிணிகளை அழைத்து வரவோ அழைத்துச்செல்லவோ 108 ஆம்புலன்ஸ் வசதிகள் உரிய நேரத்தில் கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்த பிரச்சனைகளை தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டின் போது மாவட்ட செயலாளர் வி. பாப்பாத்தி, பொருளாளர் எல். பாண்டியம்மாள், ஆர்.வனஜா, பாக்கியம் ஆகியோர் உடனிருந்தனர்.