நாகர்கோவில், அக். 1- குமரி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால மகப்பேறியல் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மையங்களான சீமாங் சென்டரில் மாதம் 200 பிரசவங்கள் நடப்பதாக ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, 9 அரசு மருத்துவமனைகள், 10 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 26 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 11 நகர்புற சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, குழித்துறை, பூதப்பாண்டி ஆகிய தாலுகா தலைமை மருத்துவமனைகளும் ‘சீமாங்” சென்டராக செயல்பட்டு வருகின்றன. 24 மணி நேரமும் செயல்படகூடிய விரிவான அவசரகால மகப்பேறியல் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ‘சீமாங் சென்டர்” ஆகும். சீமாங் சென்டர்கள் போதிய மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், குழந்தை நல மருத்துவர்களைக் கொண்டு செயல்படக்கூடியதாகும். இங்கு மாதம்தோறும் 120 முதல் 200 பிரசவங்கள் நடைபெறுகின்றன. இங்கு பேறுகால சிகிச்சைகளாகிய கர்ப்பிணி பதிவிற்கான வழிகாட்டுதல், தடுப்பூசி சேவைகள், இரத்த சோகைக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை, உயர் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிகிச்சை, 24 மணி நேர பிரசவ சேவைகள், குளிரூட்டப்பட்ட பிரசவ அறைகள் உள்ளன.
நவீன ஆய்வகம்
நவீன உபகரணங்கள் கொண்ட ஆய்வகம், அனைத்து இரத்த வகைகளும் கிடைக்கப்பெறும் ரத்த வங்கி, ரத்த சேமிப்பு மையங்கள், மகளிர், பேறுகால சிகிச்சைக்கான பிரத்யேக அறுவை அரங்கு, சிசு பராமரிப்பு சேவை, 102 அரசு இலவச ஊர்தியில் தாயும் சேயும் வீட்டிற்கு திரும்பும் வசதி, பிரசவித்த தாய்மார்களுக்கு அரசின் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம், ரூ.18,000-த்திற்கான முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்தொகை, ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு ரூ.600 அல்லது ரூ. 700 வழங்கப்பட்டு வருகிறது. உலகளவில் குழந்தை இல்லா தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 17.5 பேர் குழந்தை இல்லாமல் இருக்கின்றார்கள். நமது நாட்டில் இது 11.8 சதவிகிதமாக உள்ளது. இதன் காரணமாக செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. செயற்கை கருவூட்டல் ஓர் சிக்கலான கர்ப்பமாகும். அதனால் அம்முறையில் கருவுற்ற தாய்மார்கள் அனைவரும் வெற்றிகரமாக பிரசவித்து தாய் மற்றும் சிசு மரணத்தை தவிர்ப்பதற்கு அவர்கள் சிகிச்சைஎடுத்துக்கொள்ளும் மையங்களில் போதிய அவசர கால மகப்பேறியல் மற்றும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு சேவைகள் இருக்கின்றதா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். முக்கியமாக இரத்த வங்கி, போதிய மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், அனைத்து உபகரணங்கள் கொண்ட அறுவை சிகிச்சை அறை, பிரசவ அறை, பச்சிளம் குழந்தை பராமரிப்பு வசதி, ஆய்வகம் இவை அனைத்தும் 24x7 இயங்கும் மருத்துவமனைகளில் தங்களின் பிரசவத்தினை வைத்துக்கொள்ள திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு போதிய வசதிகள் அற்ற, செயற்கை கருத்தரித்தல் மையங்களில், பிரசவத்தை மேற்கொண்ட நமது மாவட்டத்தைச் சார்ந்த இரண்டு தாய்மார்கள் கடந்த மாதத்தில் பிரசவத்தின் போது இறந்துவிட்டனர். ஆகவே, பிரசவத்தினை மேற்கொள்ள போதிய வசதிகள் இல்லாத செயற்கை கருத்தரித்தல் மையங்களை நடத்தும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சைக்கு வரும் தாய்மார்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், பிரசவத்தின்போது தாய் மற்றும் சேய் அவர்களின் உயிர்களை பாதுகாக்க அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் மட்டுமே, தாய்மார்களை பிரசவத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
மகப்பேறு மரணங்கள் இல்லாத நிலை
மேலும், இதுபோன்ற வசதிகள் இல்லாத நிலையங்கள் வெறும் கருத்தரிப்பு மையங்களாக செயல்பட முடியாது. எனவே, செயற்கை கருத்தரித்தல் முறையில் கருத்தரித்த தாய்மார்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது சீமாங்க் சென்டர்-களுக்கு மூன்றாவது மாதத்திலிருந்தே வருகை புரிந்து கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் மருத்துவ சேவைகளை பெற்றால் அவர்களுக்கு அரசு நெறிமுறைகளைப் பின்பற்றி சிகிச்சைகள் வழங்கப்படும். இதனால் சிக்கலான பிரசவங்களினால் ஏற்படும் உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும். பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கூறிய விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு தாய் சேய் நலம் காத்திடவும் நம் மாவட்டத்தில் மகப்பேறு மரணங்கள் இல்லாத நிலை பெற்றிடவும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். தாய் சேய் நலம் குறித்த விவரங்களை அறிய 104 என்ற பொது சுகாதாரத் துறையின் மாநில கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.