districts

நேரம் மாற்றம்: பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,டிச.8- தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் மாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்தை வழக்கமான நேரத்திற்கு மாற்றி டாஸ்மாக் நிறுவனம் அறிவித்தது. இதனை  எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தொழில் சங்க சட்டத்தின்படி, வேலை நேரம் மாற்றம் தொடர்பாக அங்கீகரிப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு 21 நாட்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. ஆனால், அதுபோன்று எந்த அறிவிப்பும் வரவில்லை. எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல்,  தன்னிச்சையாக செயல்பட்டு வேலைநேரம் மாற்றப்பட்டுள்ளது என்பதால், டாஸ்மாக் நேரம் மாற்றம் தொடர்பாக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுகுறித்து 6 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

;