சென்னை, நவ.17- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க ஒப்பந்தம் சென்னையில் வியாழனன்று (நவ.17) கையெழுத்தானது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, அல்ஸ்டோம் போக்குவரத்து இந்தியா நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் ராஜூ ஜோய்சர் ஆகியோர் இதில் கையெழுத் திட்டனர். ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட்டவுடன் முதல் ரயில் 2024 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதைத் தொடர்ந்து ஓட்டுநர் இல்லாத ரயில்கள் இயக்கி சோதித்துப்பார்க்கப்படும். அதன் பின்னர் மீதமுள்ள அனைத்து மெட்ரோ ரயில்களும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2025 ஆம் ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ஓராண்டுக்குள் ஒவ்வொரு கட்டமாக மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.