சென்னை, டிச. 19 - வெறும் வாய் வார்த்தைகளால் மட்டும் வெற்றியை உறுதி செய்து விட முடியாது; கரங்கள் உயரும் போதுதான் கை விலங்குகள் முறியும் என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் 14ஆவது மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டல துணைத் தலைவர் க.சுவாமிநாதன் கூறினார். “மறுக்கப்படும் உரிமைகள் பறிக்கப்படும் சலுகைகள், எதிர்கொள் ளும் சவால்கள்” என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: 1970க்கு பிறகு பலநாடுகளிலும், 1990ஆம் ஆண்டிற்கு பிறகு உலகம் முழுவதும் அமலாக்கப்பட்ட நவீன தாராளமய பாதைக்கும் உரிமை மறுப்புக்கும், பணப்பலன்கள் பறிப்பிற்கும் உள்ள தொடர்பை புரிந்து கொள்ள வேண்டும். பொரு ளாதாரத்தில் இருந்து அரசு விலகிக் கொள்வது என்பதுதான் நவீன தாராள மயத்தின் முக்கிய அம்சம். எனவே தான் அரசு வங்கிகள், இன்சூரன்ஸ் நடத்த வேண்டியதில்லை; சாலைகள் அமைக்க வேண்டியதில்லை என பலராலும் கூறப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் பணப்பலன் களை பெறுகிறார்கள் என்றால், அதை மற்ற தனியார் தொழிற்சாலை களும் வழங்க வேண்டியது கட்டாயம்.
எனவே அரசு இதுபோன்ற பணிகளில் இருந்து விலகிக் கொண்டால், தனியார் நிறுவனங்கள் பணப்பலன்களை வழங்க வேண்டி யதில்லை என்ற நிலை ஏற்படும். புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வூதிய திட்டத்தின் நோக்க த்தையே சீர்குலைப்பதாக உள்ளது. எனவேதான் புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடு என்பது மிக முக்கியமான கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டம் என்பது பயன்கள் வரை யறுக்கப்பட்ட திட்டம். ஒரு ஊழியர் பணி ஓய்வு பெற்றால் அவரது கடைசி ஊதியத்தில் 50 விழுக்காடு அடிப்படை ஓய்வூதியமாக மாற்றப் படும் என்ற உத்தரவாதம் இருந்தது. ஆனால் நவீன தாராளமயம் வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு மட்டு மல்ல, வங்கி, இன்சூரன்ஸ் ஊழி யர்கள் என அனைத்து தரப்பின ருக்கும் பங்களிப்பு திட்டம் மட்டுமே வரையறுக்கப்படும். இந்த புதிய திட்டத்தின் வேர்கள் எங்கிருந்து வந்தது என்றால் அது இந்திய எல்லைகளையும் கடந்து வந்தது என்பதை புரிந்துகொண்டு அதற்கு எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. உலகத்தினுடைய முதல் 500 நிறுவனங்கள் (பார்ச்சூன் 500) பணப்பயன்கள் ஓய்வூதிய திட்டத்தில் இருந்து மாறி பங்களிப்பு ஓய்வூதி யத்தை நோக்கி நகர்ந்தன. 500 நிறு வனங்களில் 350 நிறுவனங்கள் அதை அமல்படுத்திய பிறகு, அவர்களு க்குள் ஒரு கேள்வி எழுந்தது, உலகம் முழுவதும் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை பெறும்போது, தனியார் தொழிற்சாலைகளில் மட்டும் புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி னால், தனியார் தொழிற்சாலை ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்ட பலன்களை கேட்பார்கள், போராடுவார்கள் என்பதால்தான், உலகம் முழுக்க அனைத்து துறை களிலும் புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சூதாட்ட மேசைகள்
பொருளாதார நிபுணர் ஒருவர் சுருக்கமாக உலக பொருளாதாரச் சூழலை கூறுகையில், உலகம் முழுவதும் சூதாட்ட மேசைகள் பரப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதான் உலக நிதிச்சூழல் என்பது அவரின் கூற்று. உலகம் முழுக்க சர்வதேச நிதி மூலதனம் சூதாட்டக்களமாக மாற்றப்பட்டுள்ள சூழலில்தான், இந்த புதிய ஓய்வூதிய திட்டம் என்ற தாக்குதல் நம்மீது தொடுக்கப் பட்டுள்ளது.
நிதி மூலதன சூதாட்டத்திற்கு ஆட்கள் குறைந்தால் அங்கே அரசு ஊழியர்களை, வங்கி ஊழியர்களை, இன்சூரன்ஸ் ஊழியர்களை அமர்த்த வேண்டியுள்ளது. இதன் காரண மாகத்தான் உலகம் முழுவதும் ஓய்வூதிய நிதியங்கள் தங்களுடைய சேமிப்புகளை எல்லாம் இதுபோன்ற சூதாட்ட நிறுவனங்களை நோக்கி திருப்ப வேண்டிய கட்டாயம் ஏற் பட்டுள்ளது. எனவேதான் ‘பலன்கள் ஓய்வூதிய திட்டத்தில்’ இருந்து ‘பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாக’ மாற்றப்பட்டது. புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தின் முன்னுரையில் ஓய்வூதியம், ஓய்வூதியத் தொகை உத்தரவாதப்படுத்தப்படாது என்று மட்டும் கூறவில்லை; ஓய்வூதி யத்திற்காக போடப்படும் முதலீடு களுக்கும் உத்தரவாதம் கிடையாது என்று கூறப்பட்டிருக்கும். இந்தியா வில் இன்னும் அது தன்னுடைய முழு உருவத்தை காட்டவில்லை. தற்போது பணி ஓய்வுபெற்ற பிறகு வழங்கப்பட வேண்டிய பணப்பல ன்களே வழங்கப்படுவதில்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 14 விழுக்காடு வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 6.4 விழுக்காடாக வட்டி குறைக்கப்பட்டுவிட்டது. இதே நிலைதான் அனைத்து வங்கிகளி லும்.
நிரந்தரத் தீர்வை நோக்கி...
புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து குறித்து கோரிக்கை வைக்கும் போதே, இந்த உலக நிதி மூலதனச் சூழலை புரிந்து கொண்டு, நாம் சந்திக்க வேண்டிய எதிரி எவ்வளவு மிகப்பெரிய எதிரி என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப வியூகம் அமைக்க வேண்டியுள்ளது. பாம்பை அதன் முதுகில், வாலில் அடிக்கும் போது பாம்பு பலவீனப்படும். பாம்பு பலவீனப்பட்டு நகராமல் இருந்தால் கூட அதன் தலையில் அடித்தால்தான் அது இறந்து போகும் என்பது நமக்கு தெரியும். அதுபோல்தான் துறைவாரியான போராட்டங்கள் முக்கியம் என்றா லும், அது பாம்பின் முதுகிலும், வாலிலும் விழுகின்ற அடிகளாக இருக்கும் பாம்பை பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வரும் பிப்ரவரி மாதம் 23, 24ஆம் தேதி நடை பெறும் போராட்டம்தான் நீங்கள் பாம்பின் தலையிலே அடிக்கக் கூடிய அடி என்பதை மறந்து விடக்கூடாது. எனவே ஒரு நிரந்தர தீர்வை நோக்கி நகர்வதற்கான விரிந்த இயக்கத்தை நோக்கி நகர வேண்டும். வெறும் வாய் வார்த்தை களால் மட்டும் வெற்றியை உறுதி செய்து விட முடியாது. கரங்கள் உயரும் போதுதான் கை விலங்கு கள் முறியும். இந்திய நாட்டினு டைய உழைப்பாளி மக்களின் கோடிக்கணக்கான கரங்கள் பிப்ரவரி 23, 24இல் உயர்ந்து நிற்கும் போது, அதில் அரசு ஊழியர்களின் கரங்களும் ஓங்கி நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.