புதுக்கோட்டை, ஏப்.27 - விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள், மண்பாண்டம் செய்யும் கூட்டுறவு சங்கம், வீடு கட்டும் பொதுமக்கள் கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண்ணை எடுத்து பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். வண்டல் மண் பெறும் விவசாயிகள் சம்மந்தப்பட்ட வருவாய் கிராமத்திலோ அல்லது அதற்கு அருகிலுள்ள வருவாய் கிராமத்திலோ வசிக்க வேண்டும். விவசாயிகள் வண்டல் எடுக்க அடங்கல் மற்றும் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (கனிமம் மற்றும் சுரங்கம்) பிரிவிற்கு அனுப்பி அனுமதி பெற்று கொள்ளலாம். நன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 75 கனமீட்டர், ஹெக்டேருக்கு 185 கனமீட்டர், புன்செய் நிலத்திற்கு ஏக்கருக்கு 90 கனமீட்டர், ஹெக்டேருக்கு 222 கனமீட்டர், வீட்டு உபயோகத்திற்கு 30 கனமீட்டர், மண்பாண்டம் செய்ய 60 கன மீட்டர் என்ற அளவிற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும். வண்டல் மண் எடுக்கும் போது, சம்பந்தப்பட்ட பொறியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வண்டல் மண் அள்ள வேண்டும். ஒரு மீட்டர் ஆழத்திற்கு மேல் மண் அள்ளக்கூடாது. குளத்தின் கரையை பாதையாக பயன்படுத்தக் கூடாது. குறுக்கு பாதைகள் ஏற்படுத்தக்கூடாது. வண்டல் மண்ணை எக்காரணம் கொண்டு சேமித்து வைக்க அனுமதி இல்லை. கரை, மதகு அல்லது கட்டுமான வேலைப்பாடுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.