districts

img

உலகத் திரைப்பட விழா திருவாரூரில் துவங்கியது

திருவாரூர்,செப்.18-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் திரை இயக்கம் சார்பில் 8 ஆவது உலகத் திரைப்பட விழா புதன்கிழமையன்று திருவாரூரில் தைலம்மை திரையரங்கில் துவங்கியது.

துவக்க விழாவுக்கு மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை வகித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் ஐ.வி. நாகராஜன் வரவேற்றார். விவசாயிகள் சங்கத்தின் முன்னால் மாநில துணைத்தலைவர் ஜி.சுந்தரமூர்த்தி,நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் துவக்கி வைத்துப் பேசுகையில், தில்லி, மும்பை, சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த உலக திரைப்பட விழா, திருவாரூரில் நடைபெறுவது அனைவரது புருவங்களையும் ஆச்சரியத்தில் உயர வைத்துள்ளது. திரைப்படம் மிகப்பெரிய சாதனம். எளிய மக்களின் மேம்பாடு, சமூக அக்கறை ஆகியவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் சிறந்த சாதனமாக திரைப்படம் விளங்குகிறது. உலகத்தில் ஏராளமான பிரச்சனைகள் நிலவுகின்றன. அவைகளை நமக்கு தெளிவுபடுத்துவது திரைப்படங்களே. 

திரைப்படங்கள், மனிதர்களிடம் தாக்கத்தை உருவாக்கக்கூடியவை.பல்வேறு நாட்டு கலாச்சாரங்களை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றன. உலகத்திரைப்பட விழா திருவாரூரில் நடைபெறுவது சிறப்பு மிக்கது என்றார்.

திரைப்பட விழாவின் நோக்கம் குறித்து திரை இயக்க ஒருங்கிணைப்பாளர்  ஐ.தமிழ்மணி, திரையிடல்கள் குறித்து திரைத்துறை பேராசிரியர்  எம்.சிவக்குமார் ஆகியோர் கூறினர்.

முன்னதாக, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கும், திருவிக மணிமண்டபத்தில் உள்ள திருவிக சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து தாரை, தப்பட்டை முழங்க எழுச்சியாக புறப்பட்ட பேரணி தைலம்மை திரையரங்கில் நிறைவுபெற்றது. 

நிகழ்வில் அமைப்பின் மாநிலபொதுச்செயலாளர் ஆதவன்தீட்சன்யா, துணைபொதுச்செயலாளர் களப்பிரன், திரைப்பட கலைஞர் ரோகிணி, திருவாரூர்  மாவட்டத்தலைவர் மு.செளந்தராஜன்,செயலாளர் ஜீ.வெங்கடேசன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரைப்பட ஆர்வலர்கள்  பலர் கலந்து கொண்டனர். முதல் நாளில் ஐந்து உலக திரைப்பட காட்சிகள் திரையிடப்பட்டது. செப்டம்பர் 22 ஆம் தேதி வரை உலகத்திரைப்பட விழா நடைபெறுகிறது.