districts

img

பசியை வெல்வதற்கான போராட்டமே மனித குல வரலாறு :எஸ்.ராமகிருஷ்ணன்

பசியை வெல்வதற்காக நடத்திய போராட்டத்தின் வரலாறே மனிதகுல வரலாறு ஆகும். பசியை வெல்ல முடியுமா என்பது தெரியாது, ஆனால் அதற்கான நம்பிக்கையை புத்தகங்கள் தருகின்றன. எனவே அந்த நம்பிக்கையை வெல்ல முடியாது என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாள் நிகழ்வாக சனிக்கிழமை மாலை பசியின் கதை என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: பசி குறித்துத்தான் தமிழ் இலக்கியம் அதிகம் பேசி இருக்கிறது. இந்த திருப்பூர் நகரில் ஏராளமானோர் வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்து தங்கியிருக்கின்றனர்.

பசி தான் அவர்களை இங்கு வரவழைத்திருக்கிறது. பசியை வெல்வதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வரலாறு தான் மனிதகுலத்தின் வரலாறு. உணவும், பசியும் மனித வாழ்க்கையை அடுத்த நிலைக்கு கொண்டு போய் உள்ளன. பசிப்பிணி இல்லாமல் ஆக்குவது சமுதாயக் கடமை என்று திரும்பத் திரும்ப இலக்கியம் சொல்கிறது. மனிதன் வெல்லவே முடியாத ஒரே உந்து சக்தி பசிதான்! என்ற கருத்தை ஜாக் லண்டனின் உயிர் ஆசை நூல் அற்புதமாக விளக்கி இருக்கும்.

வர்த்தகமான உணவு

இன்று உணவு மிகப்பெரிய வர்த்தகமாக, மிகப்பெரிய சந்தையாக மாறி இருக்கிறது. உங்கள் தேவைக்கு அதிகமாக உணவை பலரும் குவித்து வைப்பதை, விரயம் செய்வதை காண்கிறோம். பசியைப் பற்றி ஒரு தலைமுறை இன்றைய தலைமுறைக்கு கற்றுத் தரவில்லை. எல்லா அவமானங்களையும் சகித்துக் கொண்டு உண்ணக் கூடியவர்களாகத் தான் இந்தியர்கள் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் உணவின் பேரால் வேறுபாடு பார்க்கவும், வெறுக்கவும் கூடிய அரசியல் நடைபெற்று வருகிறது.

பசித்தவருக்கு தொடர்ந்து உணவு கொடுக்கும் அமுதசுரபியை மணிமேகலை வைத்திருப்பது போல் உலகில் வேறு எந்த இலக்கியத்திலும் இல்லை. அந்த அட்சய பாத்திரமும் மணிமேகலைக்கு உரியதல்ல. ஆபுத்திரன் அதை பொய்கையில் விட்டு விட்டான். ஏன் விட்டான், பசித்தோர் இல்லை என்பதால் அமுத சுரபி தேவைப்படவில்லை என்பதால் பொய்கையில் விட்டான். அங்கிருந்துதான் மணிமேகலை அதைப் பெற்றாள். எல்லாம் நன்றாகவே இருந்தது என்று இலக்கியம் காட்டுகிறது.

ஆனால் இன்று ஒரு பக்கம் வளர்ச்சி, மறுபக்கம் ஒடுக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இன்று ஓராயிரம் அட்சய  பாத்திரம் இருந்தாலும் ஒரு அரசுக்கு, பல சமூகங்களுக்கு உணவு என்பது பெரும் கேள்வியாக, சவாலாக உள்ளது. அட்சய பாத்திரம் என்பது பாத்திரமல்ல, அது மனம்தான். பகிர்ந்து கொடுத்து உண்ண வேண்டும் என்ற உணர்வின் வெளிப்பாடு தான் அட்சய பாத்திரம். எல்லோரும் சேர்ந்து உண்ணும் போது அளவற்ற மகிழ்ச்சி ஏற்படும்.

வள்ளலாரின் அன்னசாலை

மனித வாழ்வு மேம்பாடு அடைய அடிப்படையானது, நற்செயல்களை முன்வைப்பது தான். வள்ளலாரின் அடுப்பு பசி பிணியைப் போக்க நூற்றாண்டு கடந்தும் தொடர்ந்து இன்றும் எரிந்து கொண்டே இருக்கிறது. வள்ளலாரின் அன்னசாலை போன்று உலகில் வேறெங்கும் இல்லை. பசியில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது, உலகத்திற்கே வழிகாட்டக் கூடியது. அமுதசுரபி என்பது இலக்கியம் காட்டியது, வள்ளலார் நேரடியாக செய்து காட்டிய நற்செயல் அன்னசாலை! ஆனால் இன்று அத்தனை உணவு தயாரிப்பு நிறுவனங்களும் உங்கள் காலை உணவைத் தான் குறி வைக்கின்றன.

இரண்டு ஆண்டு காலம் கொரோனா பெருந்தொற்று நம் சரி, தவறுகளை மீள் பரிசீலனை செய்து கொள்ள கற்றுக் கொடுத்திருக்கிறது. 2000 ஆண்டு கால மொழி, ஆறு, இயற்கை சூறையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. நூற்றாண்டுக்குள் ஏற்பட்டிருக்கும் பேரழிவு மிகப்பெரியது. இயற்கை மனிதனின் அத்தனை தவறுகளுக்குப் பிறகும் செய்த தவறுகளை மன்னித்து இன்னுமொரு முறை வாய்ப்பு அளித்துள்ளது. இதையும் நாம் சரியாக புரிந்து கொண்டு செயல்படாவிட்டால் அடுத்து ஏற்படும் பாதிப்பு மிக மோசமானதாக இருக்கக்கூடும்.

நம்பிக்கை தரும் புத்தகங்கள்

புத்தகங்கள் இல்லாமல் போனால் என்னவாகும்? புத்தகங்களை இழப்பது உயிரை இழப்பதை விட மோசமானதாகும். அச்சடித்த புத்தகங்களை அழித்தாலும், மனித மனங்களில் உள்ள புத்தகங்களின் நினைவுகளை அழிக்கவே முடியாது. ஒவ்வொரு மனிதரும் நடமாடும் புத்தகம். புத்தகம் என்பது காலப்பயணி, காலத்தின் ஊடாக பயணிக்கக் கூடியது. பசி, பட்டினியை வெல்ல முடியுமா தெரியாது, ஆனால் நம்பிக்கையை வெல்ல முடியாது. இவ்வாறு எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்வுக்கு வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர் அரிமா மு.ஜீவானந்தம் தலைமை வகித்தார். இதில் வரவேற்புக்குழுத் துணைச் செயலாளர் மு.திருப்பதி வரவேற்றார். வனத்துக்குள் திருப்பூர் சிவராமன், திருப்பூர் சிவில் இன்ஜினியர்கள் சங்கத் தலைவர் சௌ.ஸ்டாலின் பாரதி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கேரவன் ஆறுமுகம், பரணி எம்.நடராஜன், எஸ்.ஆர்.வி.பால்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக சுரேஷ் குமார் நன்றி கூறினார்.