திருப்பூர், ஆக. 16- நூறு நாள் வேலைத் திட்டத்தைப் பலப்படுத்தி, நகர்ப்புறங்களிலும் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இயக்கத்தில் உடுமலை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட்டை வெட்டிக் குறைத்துள்ளது. ஒன்றிய மோடி அரசு இந்த திட்டத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது. இதன் தொடர்ச்சியாகவே, திருப்பூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முழுமையாக வேலை தராமல் மறுப்பதுடன், அவர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளமும் காலதாமதம் செய்யப்படுகிறது.
எனவே நூறு நாள் வேலைத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இத்திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், ரூ.600 தினக் கூலி வழங்க வேண்டும்.
திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு நகராட்சிப் பகுதிகளில் அருகாமை கிராம ஊராட்சிகளை நகர்ப்புறங்களில் இணைக்க அரசு உத்தேசித்துள்ளது. இதனால் நூறு நாள் வேலை திட்டத் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்படும் என்பதால், நகர்ப்புறங்களுக்கும் வேலை உறுதியளிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த இயக்கத்துக்கு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவருமான கே.கணேசன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், ஊத்துக்குளி பேரூராட்சி மன்ற உறுப்பினருமான கு.சரஸ்வதி ஆகியோர் உரையாற்றினர்.
இதில் திருப்பூர், அவிநாசி, பல்லடம், பொங்கலூர், ஊத்துக்குளி உள்ளிட்ட வட்டாரங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் உள்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி தலைவர்கள் மனு அளித்தனர்.
உடுமலை
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், ஊரக வேலை திட்ட தொழிலாளர்கள் எலையமுத்தூர் பிரிவில் இருந்து ஊர்வலமாகச் சென்று உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். உடுமலை ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதனன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பஞ்சலிங்கம், சசிகலா, நகரச் செயலாளர் தண்டபாணி, மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.