districts

img

உடுமலை அருகே போளரப்பட்டியில் ஒரு மல்லாண்டைக்கல்

அண்மையில்  ஆமந்தகடவு பகுதியில்  உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின்சார்பில் ஒரு மல்லாண்டைக் கல் பதிவு செய்யப்பட்டது. தற்போது   அதே போல்  போளரப்பட்டி சிவன்கோயிலில்  பழங்கால வழிபாட்டு மரபு சார்ந்த மல்லாண்டைக்கல் கண்டறியப்பட்டுள்ளது.

உழவு சார்ந்த மேய்ச்சல் நிலங்கள் சார்ந்த வாழ்விடங்களில் அந்த குழுவின் தலைவனோ,  அந்தக் குழுக் கூட்டத்தின் தலைவனோ இறந்த போது அந்த வாழ்விடத்திற்கருகிலேயே அவன் நினைவாகப் பெருங்கல் ஒன்றை  நட்டி வழிபடுபவர். இது வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து  வருவதாக  ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இது போன்ற தொன்மையான குத்துக்கற்களை நெடுங்கல் என்றும் குறிப்பிடுவர். இதுவும் ஒரு வகை நடுகல்லாகும். 

இது ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வயல்வெளிகளில் இருந்ததாகவும், மக்கள் இதனை வழிபாடு செய்வதற்காக எடுத்து வந்து சிவன் கோயிலின் வளாகத்தினுள் வைத்து வழிபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  இதனை சிவன், பெருமாள், இராமன் என்றும் பெயரிட்டு வழிபடுகின்றனர். 

இந்தக்கல் உண்மையில் வேளாண் நிலத்தில் நெற்களத்தில் அறுவடை செய்து நெல்லைப் படையலாக்கி வழிபட்டு வந்த மல்லாண்டைத் தெய்வம் என்றும் தற்போது மல்லாண்டைக் கால் வழிபாடு இல்லாமல் மறைந்து விட்டதாகவும் வரலாற்று ஆய்வு நடுவத்தின்  ஆய்வாளர்கள் முனைவர் வை. விஜயலட்சுமியும்,  வட்டார வளமைய வரலாற்றுப்பயிற்றுநர் செ.ராபின் ஆகியோர் கருத்து தெரிவிக்கின்றனர். 

இம்மல்லாண்டை வழிபாடு உழவர் இன மக்களால் மட்டுமே நிகழ்த்தப்பெறுவதாகக் கூறப்படுகிறது.  மல்லாண்டை வழிபாடு செழிப்பு வழிபாட்டு (வளமை வழிபாடு மரபின் பாற்பட்டது. கொங்கு நாட்டில் இம்மரபு பரவலாக இருந்துள்ளது. கொங்கு நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பெறும் அரவாண் பண்டிகையின்போது பாடப்பெறும் பாடலில்,

ஊருக்கொரு கூத்தாண்டெ செய்யோணும்

களத்துக்கொரு மல்லாண்டே செய்யோணும்

எனும் வரிகள் மல்லாண்டை வழிபாட்டின் சிறப்பை எடுத்துக் கூறுகிறது.

இது மல்லாண்டைத் தெய்வம் நல்ல விளைச்சலை ஏற்படுத்தும் என்கிற நாட்டார் நம்பிக்கை வழக்காற்றின் வடிவமே ஆகும்.

இந்த மல்லாண்டைக் கல் சுமார் இரண்டடி உயரமும்  கீழ்ப்பகுதி சற்றே அகலமாகவும், மேற்பகுதி குறுகியும்  தோற்றமளிக்கிறது. 

பழமை சார்ந்து பண்பாடு சார்ந்த  உழவுத் தொழிலே  அருகி வரும் வேளையில் இது போன்ற  உண்மை வேளாண் சார்ந்த இயற்கை வழிபாடுகள் அழிந்து வருவதும்  நம் மக்களின் அறியாமையை உணர்த்துகிறது. 

வரலாற்றின் உண்மை பக்கங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்கும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் களப்பணியில் பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் முனைவர் விஜயலட்சுமி, வட்டார ஆசிரியப் பயிற்றுநர் செ.ராபின், பொள்ளாச்சி அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சு. முனியப்பன் ஆகியோர் ஈடுபட்டனர்.