districts

மாஞ்சோலை தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்கக் கூடாது!

திருநெல்வேலி,  ஆக.7 - மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மலையில் இருந்து கீழே இறக்கக் கூடாது என திருநெல்வேலியைச் சேர்ந்த வன ஆர்வலர் முத்துராமன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்திருந்தார்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கையை உடனே மேற்கொள்ளுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களை மலையிலிருந்து காலி செய்யும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக மனு அளித்திருந்தாலும், மீண்டும் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள மனித உரிமை ஆணையம் நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருப்பதால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே ஊத்து தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மாஞ்சோலை பேருந்து நிறுத்தப் பகுதியில், கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர். பின்பு, அனைவரும் கஞ்சி குடித்து, தங்களது வேலை இழப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.