அருமனை, ஆக.26- கேரளா மாநிலம் வய நாட்டில் நடைபெற்ற பேரிழப்புக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ,இடதுசாரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நிவாரண பணிகள், உதவிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க குமரி மாவட்ட குழு சார்பாக பல்வேறு நிகழ்வுகள் நடத்தி அதில் வரக்கூடிய பணத்தை வயநாடு மக்களின் பாதுகாப்புக்காகவும் வாலிபர் சங்கம் ஏற்படுத்தும் புதிய கட்டட உதவிக்காகவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டாரக்குழு சார்பில் அருமனை சந்திப்பில் பிரியாணி விற்பனை செய்வது என முடிவு செய்து அதில் வரக்கூடிய பணத்தை வயநாடு மக்களுக்கு உதவும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என உறுதி செய்து ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் அருமனை சந்திப்பில் ஒரு நாள் பிரியாணி விற்பனை மேளா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். லீமாறோஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் , அருமனை பேரூராட்சி தலைவர் லெதிகா மேரி, கடையாலுமூடு பேரூராட்சி தலைவர் ஜூலியட், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பேபி மற்றும் அருமனை பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாலிபர் சங்க நிர்வாகிகள் ரெஜின், சரவணன் புஷ்பராஜ் மற்றும் மாணவர் சங்க மாவட்ட நிர்வாகி குயிலி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது மக்கள் எந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டாலும் இதுபோல் வாலிபர் அமைப்புகள் முன்வந்து நற்செயலில் செயல்பட வேண்டும் எனவும் இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம் நடத்துகின்ற இப்பணி மகத்தான பணி என்று பாராட்டினார்.