தஞ்சாவூர், அக்.21 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் மரக்காவலசை பாலவயல் முகைதீன் தெருவில் பொது மக்கள் பயன்பாட்டிலிருந்த பாலாக்குளம் மாசடைந்து நோய்த்தொற்று ஏற்படும் அபாய நிலையில் உள்ளதால் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 800 மீட்டர் நீளமும் 200 மீட்டர் அகலமும் உள்ள இந்த குளம் கடந்த பல வருடங்களாக தூர்வாரப்படாமலும், குளத்துப்பகுதியில் குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதாலும் மாசடைந்து, குளத்து நீர் சாக்கடையாக மாறி வரு கிறது. பொதுமக்கள், மாணவர்கள் குளிப்ப தற்கு வேறு வசதியில்லாததால் இந்த குளத்து நீரை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குளத்து நீரை பயன்படுத்தும் மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குளம் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஊராட்சி நிர்வாகத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே, இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தை ஆய்வுசெய்து, தூர்வாரி சீர மைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.