அங்காரா, மே 14-
மே 14 (ஞாயிறன்று) துர்க்கியே நாட்டின் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
2003-ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் ரிசெப் தய்யீப் எர்டோகன் ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். அவருடைய நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சிக்கும், எதிர்க்கட்சி கூட்டணிக்கும் கடுமையான போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஜனாதிபதி எர்டோகன் மீது அதிருப்தி இருப்பதால், எட்டு கோடியே 50 லட்சம் மக்கள் வாழும் துர்க்கியேவில் மாற்றம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்.
முதன்முறையாக எதிர்க்கட்சிகள் ஒருதரப்பில் திரண்டுள்ளன. நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான கேமல் கிளிக்டரோக்லுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பசுமை-இடதுசாரிக் கூட்டணி தனி அணியாகக் களம் காண்கிறது. மொத்தமுள்ள 600 இடங்களில் 100 இடங்களைப் பெற்றாக வேண்டும் என்ற உறுதியுடன் தங்கள் பிரச்சாரத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள்.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும் இருந்த ஹிஸ்யார் ஓஸ்சோய், “ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்களை துர்க்கியே சந்தித்து வந்துள்ளது. பொருளாதாரம் பெரும் சிக்கலில் இருக்கிறது. பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுள்ளது. சமச்சீரற்ற நிலை பரவலாகவும், செல்வ விநியோகம் நேர்மையற்ற வகையிலும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.