districts

img

தில்லி தர்ணாவில் பங்கேற்கும் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள்

மயிலாடுதுறை, பிப்.7-  மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தர்ணாவில் பங்கேற்க, மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழனன்று புறப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லி இந்தியா கேட் சர்க்கிள் பகுதியில் பிப்.10 அன்று மாற்றுத்திறனாளிகளின் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. மாற்றுத் திறனாளிகளின் நீண்ட கால கோரிக்கையான அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாதந்தோறும் ரூ.10,000 வழங்கிட வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தையும் வறுமைக்கோட்டின் கீழ் கொண்டுவந்து அவர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும், ஒருங்கிணைந்த தேசிய அடையாள அட்டை வழங்கி, அனைத்துப் பயன்பாட்டுக்கும் கொண்டுவர வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் வேலை, முழு சம்பளமும் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற உள்ளது.  தமிழ்நாட்டில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.கணேசன் தலைமையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் புறப்பட்டனர். தங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றித் தரும் என்ற நம்பிக்கையுடன் தில்லிக்கு புறப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.