குடவாசல், டிச. 3 - குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் 2021-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை பள்ளியின் ஆசிரியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் தலைவர் ஆர்.முருகேசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வில் தலைவராக பா.பிரபாகரன், செயலாளராக தலைமை ஆசிரியர் ஏம்.ஜீவரேகா, பொருளாளராக ஆதித்யா பாலு, துணைத் தலைவராக கே.குணசேகரன் ஆகியோரும் கௌரவ ஆலோசகர்களாக மருத்துவர் நாவரசு, எஸ்.எஸ்.ஐ அறக்கட்டளை நிறுவனர் எஸ்.சையது சகாபுதீன், கே.தமிழ்சேரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உட்பட 8 நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக பொறுப்பேற்ற பிரபாகரன் பேசுகையில், முதல் கட்டமாக பள்ளிக்கு தேவையான சுகாதாரமான கழிப்பறை, குடிநீர் மற்றும் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் உடனடித் தேவையாக உள்ளது. எனவே முதல் பணியாக கூடுதல் கழிப்பறை கட்டடம் மற்றும் வகுப்பறைகள் ஏற்படுத்த உரிய வகையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பள்ளி ஆசிரியர்கள் பேசுகையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் 100 சதவீத மாணவிகள் தேர்வுக்கு உத்தரவாதம் அளித்தும், பள்ளி கூடுதல் வகுப்பறை, பள்ளி கட்டடங்கள் பழுது நீக்குதல் உள்ளிட்டவை குறித்து பேசினர். இந்நிகழ்வில் குடவாசல் அரசு ஆண்கள் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கழகத்தின் நிர்வாகிகள், புரவலர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.