தஞ்சாவூர், பிப்.7- இணையவழி குற்றத்தில் பணத்தை இழப்பவர்கள் விரைவாக புகார் செய்தால், மீட்டுவிட முடியும் என தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் தெரிவித்தார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக நிர்வாகம், காவல் துறை சார்பில், வியாழக்கிழமை நடைபெற்ற மாணவர்களுக்கான சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அவர் பேசியது: “இணையவழிக் குற்றங்கள் கண்ணுக்கு தெரியாமல் நாள்தோறும் நிகழ்கின்றன. இது தொடர்பாக ஒரு நெட்வொர்க்கை எடுத்து பார்த்ததன் மூலம், மேற்கு வங்கத்துக்குச் சென்று ஒரு நபரை பிடித்து வந்து விசாரித்தோம். அப்போது, அந்த நபர் இணையவழி மூலம் ஒரு மணிநேரத்தில் ரூ.36 கோடி பறித்தது தெரிய வந்தது. அவ்வாறு வந்த தொகை நான்கைந்து, வங்கிக் கணக்குகளில் சேருகிறது. அது, உடனடியாக 500 வங்கிக் கணக்குகளுக்குச் செல்கிறது. அவ்வளவு நெட்வொர்க்குகளை வைத்துள்ளனர். மீண்டும் அந்த 500 வங்கிக் கணக்குகளிலிருந்து ஒரு வங்கிக் கணக்குக்கு போகிறது. அந்த வங்கிக் கணக்குக்குரிய நபர், மடகாஸ்கரில் உள்ளார். அவரை கண்டுபிடித்து விசாரித்தால், அப்படியொரு வங்கிக் கணக்கு இருப்பது எனக்கே தெரியவில்லை என அவர் கூறினார். அவர் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தாலும், அவரிடம் ரகசிய குறியீட்டு எண் இல்லை. அவருக்கே தெரியாமல் அவரது வங்கிக் கணக்கை வேறொருவர் இயக்குவது தெரிய வந்தது. இணையவழியில் பணத்தை இழப்பவர்கள் காலம் கடத்தாமல் விரைவாக வந்து புகார் செய்தால், இழந்த பணத்தை முழுமையாக மீட்டுத் தர முடிகிறது. உதவி எண் 1930 என்ற எண்ணில் உடனடியாக தகவல் தெரிவித்தால், பணத்தை இழந்த 24 மணிநேரத்துக்குள் வேலையைத் தொடங்கிவிட்டால், நிச்சயமாக அப்பணத்தை மீட்டுவிட முடியும். எனவே, பணத்தை இழந்து விட்டால் கைப்பேசியிலிருந்து உடனடியாக 1930 என்ற எண்ணில் புகார் செய்யும்போது, உடனடியாக சேவை பதிவேடு (சி.எஸ்.ஆர்.) தானாகவே உருவாகி, அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்துக்குச் சென்றுவிடும். பறிபோன தொகை ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வழக்குப் பதிவு செய்தும், ரூ.5 லட்சத்துக்குள் இருந்தால் சேவை பதிவேடு பதிவு செய்தும் இருவிதமான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். இதன் மூலம், இழந்த பணத்தைத் திரும்ப மீட்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்றார். இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் (பொ) க.சங்கர் தலைமை வகித்தார். சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் டி. சிவசுப்பிரமணியன், காவல் ஆய்வாளர்கள் எம். அறிவழகன், கோ. முத்துக்குமார், உதவி ஆய்வாளர் து.ரோஸ்லின் அந்தோணியம்மாள், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம், ஆட்சிக் குழு உறுப்பினர் பெ.பாரதஜோதி ஆகியோர் பேசினர். முன்னதாக, இணைப் பேராசிரியர் இரா.ஆனந்த் அரசு வரவேற்றார். மக்கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு. முருகன் நன்றி கூறினார்.