districts

பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர் எண்ணிக்கை குறைந்துள்ளது

தஞ்சாவூர், மார்ச் 6 - நிகழாண்டு உயர் அலுவலர்கள் மேற்கொண்ட நடவடிக்கை மூலம் பொதுத் தேர்வில் பங்கேற்காத (ஆப்செண்ட்) மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில், தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை புதன்கிழமை திறந்து வைத்த அவர் கொ.வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நிகழாண்டு பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு பங்கேற்காதவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நிகழாண்டு 10 ஆயிரம் முதல் 12 ஆயிரமாகக் குறைந்துள்ளது. ஒரு பள்ளிக்கு 1 அல்லது 2 மாணவர்கள்தான் பங்கேற்கவில்லை என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதற்காக ஒவ்வொரு உயர் அலுவலரும் முயற்சி எடுத்தனர். கொரோனா காலத்தில் பள்ளிக்கு குழந்தைகள் வராத நிலையிலும், அதன்பிறகும் கல்வியில் நாட்டம் செலுத்தாத குழந்தைகளுக்கும் சேர்த்து தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டது. கல்வி முறையிலிருந்து குழந்தைகள் வெளியில் சென்றுவிடக் கூடாது என்ற அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு பள்ளிக்கு சரியாக வராத மாணவர்களையும், தேர்வுக்கு முந்தைய ஒரு மாத காலத்தில் தயார்படுத்தினோம். அதைப் புரிந்து கொண்டு சில மாணவர்கள் தேர்வு எழுதினர். சில மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. அந்த நிலைமை மீண்டும் வந்துவிடக் கூடாது. நிகழாண்டு முயற்சி எடுத்து கணிசமான அளவுக்குக் குறைத்துள்ளோம். வருங்காலத்தில் தமிழக முதல்வரின் திட்டங்களைக் கூறி பள்ளிக்கு வரவழைப்பதற்கு நடவடிக்கை எடுக்க உள்ளோம். இதன் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை மார்ச் 1 ஆம் தேதியே தொடங்கப்பட்டு விட்டது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கன்வாடிகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 3.30 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடிகளிலிருந்து அரசுப் பள்ளிகளில் முழுமையாகச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் என வரக்கூடிய வதந்திகள் உண்மையாகிவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.