districts

சீர்காழி இசைப் பள்ளியில் கலைப் போட்டிகள்

மயிலாடுதுறை, பிப்.26 - கலைத் துறையில் சிறந்து விளங்குகிற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட-மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை மாவட்ட அளவிலான போட்டிகள், ‘அரசு இசைப்பள்ளி, புழுகாப்பேட்டை, சீர்காழி’ என்ற முகவரியில், மார்ச் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் நடைபெறுகிறது. மார்ச் 9 (சனிக்கிழமை) அன்று ஓவியம் மற்றும் கிராமிய நடனப் போட்டிகளும், மார்ச் 10 (ஞாயிறு) அன்று குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் போட்டிகளும் நடைபெறும்.  நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைப் போட்டியிலும், தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங் பிரிவுகளிலும் இசையினை முறையாக பயின்றவர்கள் பங்கேற்கலாம். பரதநாட்டியம் பிரிவில் ஒரு மார்க்கம் தெரிந்தவர்கள் பங்குபெறலாம்.  கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.  அனைத்துப் போட்டிகளிலும் குழுவாக பங்கேற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவர். ஓவியப் போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணிநேரம் அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டிகளில் முதல் பரிசு ரூ.6000, 2 ஆம் பரிசு ரூ.4500, 3 ஆம் பரிசு ரூ.3500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநிலப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தொலைபேசி எண்.04364-274611-ஐ தொடர்பு கொள்ளலாம்.  இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க மயிலாடுதுறை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.