districts

மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணியை துவங்கிடுக! அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கரூர், ஜூன் 24 -

     தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மண்மங்கலம் வட்டக் குழுவின் 6 ஆவது பேரவை வெண்ணமலையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு வட்டத் தலைவர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வட்ட துணை செயலாளர் பி.புகழேந்தி வரவேற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல் பேரவையை துவக்கி வைத்து பேசினார். வட்டச் செயலாளர் வி.கோபி வேலையறிக்கை, வரவு-செலவு அறிக்கையை முன்வைத்தார்.

     தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் மு.செல்வராணி, மாவட்ட தலைவர் எம்.எஸ்.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

     மண்மங்கலத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். இச்சாலையில் ஆயிரக்கணக்கான விபத்துகள் நிகழ்ந்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். எனவே இப்பகுதியில் உடனடியாக மேம்பாலம் கட்டும் பணியை துவங்க வேண்டும். மண்மங்கலம், புகளூர் தாலுகாக்களை மையமாகக் கொண்டு மண்மங்கலத்தில் அரசு கலைக் கல்லூரி அமைத்திட வேண்டும்.

    மாணவர்கள் இலவசமாக நீச்சல் பயிற்சி கற்றுக்கொள்ள, மண்மங்கலம் பகுதியில் மாவட்ட அளவில் நீச்சல் குளம் அமைக்க வேண்டும். மண்மங்கலத்தில் போதிய அளவு செல்போன் சிக்னல் கிடைக்காததால் பல்வேறு பணிகள் தாமதப்படுகின்றன. எனவே இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.