districts

img

சுவடிகளில் உள்ள தமிழ்க் கணக்குகளை மீட்டெடுப்போம்

தஞ்சாவூர், ஆக.30 - தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், அரிய கையெழுத்துச் சுவடித்துறையில், ‘தமிழ்ச் சுவடிகளில் எண்ணும் எழுத்தும்’ என்ற பொருண்மையிலான பயிலரங்கம் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள் நடைபெற்றன.  இப்பயிலரங்கின் தொடக்க விழா, தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகராசன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் கணக்கதிகாரம், ஆஸ்தான கோலாகலம் முதலிய தமிழ்க் கணக்குச் சுவடிகளின் பதிப்பாசிரியர் கா.சத்தியபாமா உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “தொல்காப்பியம் முதலாக இலக்கண, இலக்கியங்களில் இடம்பெறும் தமிழ்க் கணக்கு முறைகளையும், தமிழ் எண் வடிவங்களையும் குறிப்பிட்டு, தமிழ்ச் சுவடிகளில் உள்ள கணக்குகளை மீட்டெடுத்தலும் பயன்பாட்டில் படிப்பித்தலும் அவசியம்” என்றார். ஏடகம் அமைப்பின் நிறுவனரும், தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தின் தமிழ்ப் பண்டிதருமான மணி.மாறன் சிறப்புரையாற்றுகையில், “ஆறுமுகநாவலர், உ.வே.சா, சி.வைதா முதலியோர் சுவடிகளைப் பதிப்பிக்கும் முயற்சியில் சுவடிகளைத் தேடிச் சென்ற வரலாற்றையும், அதன் பயனாக நமது கைகளில் தவழும் தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் குறிப்பிட்டது, சுவடி நூலகங்களில் உள்ள சுவடிகள் மின்படியாக்கம் செய்யப்பட்டு இணையப் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவை பெரிதும் துணை நிற்கின்றன. எனினும் அச்சுவடிகளில் பத்து விழுக்காட்டுச் சுவடிகளே பதிப்பிக்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இன்னும் பதிப்புப் பெறாமல் உள்ளன” என்றார். வரவேற்றுப் பேசிய முனைவர் த.கண்ணன், “தமிழ்ச் சுவடிகளில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்களையும் எண் குறியீடுகளையும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் விதமாகவும் சுவடிகளில் புதைந்துள்ள கணக்குகளை மீட்டெடுக்கும் விதமாகவும் இப்பயிலரங்கம் அமைந்துள்ளது” என்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் ம.யோகேஸ்வரன் நன்றி கூறினார்.