districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஆளுநரின் செயலுக்கு  ஜவாஹிருல்லா கண்டனம் 

பாபநாசம், டிச.7-  நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநரின் செயல்களுக்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக சட்டசபையில் உரையாற்ற அழைக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என் ரவி  கடந்த ஆண்டைப் போலவே இந்தாண்டும் உரை நிகழ்த்தாமல் வெளிநடப்பு செய்துள்ளார். தமிழக சட்டமன்ற நெடிய வரலாற்றில், சட்டசபை நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த் தாய் வாழ்த்தும், முடிவில் நாட்டுப் பண்ணும் பாடப்பட்டு நிறைவு செய்யப்பட்டு வருகின்றது. இந்த மரபுகளை நன்கு தெரிந்த ஆளுநர் ஆர்.என் ரவி, தனது மனம் போன போக்கில் மரபுகளுக்கு எதிராக இன்று மீண்டும் உரையை வாசிக்காமல் இரண்டாம் தடவையாக வெளிநடப்புச் செய்து, தமிழ்நாடு சட்டமன்றத்தையும், தமிழக மக்களையும் அவமதித்துள்ளார். சுகாதாரம், கல்வி, தொழில் முன்னேற்றம், வேலை வாய்ப்புகளில் இன்று தன்னிறைவுப் பெற்ற மாநிலமாக, அனைவரையும், ஒருங்கிணைந்த வளர்ச்சியில், தமிழகம் வேகமாக முன்னேறி வருகின்றது. மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவையான நிதித் தேவைகளை பெற்றுத் தருவதற்கு முயற்சி எடுக்காத ஆளுநர் ஆர்.என் ரவி, பிரச்சனைகளை திசைத்திருப்ப மீண்டும் மீண்டும் நாட்டு பண் விவகாரத்தை முன்னெடுப்பது, சட்டமன்ற மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் களங்கப்படுத்தும் செயலாகும். தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் தலையிட்டு, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். ஆளுநரின் செயல்பாடுகள் குறித்த நீதிமன்ற தீர்ப்புகளுக்கு விரோதமாக செயல்படும், ஆளுநரின் செயல்களுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அகற்றப்பட்ட பேருந்து நிழற்குடைகளை அமைக்க வலியுறுத்தி வி.தொ.ச ஆட்சியரிடம் மனு

திருச்சிராப்பள்ளி, ஜன.6-  திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் அன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர் ராஜேஷ்கண்ணா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.  அந்த மனுவில், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம்திருச்சி - கரூர் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்தபோது, பல பேருந்து நிழற்குடைகள் அகற்றப்பட்டன. அதில் ஒன்று முத்தரசநல்லூரில் உள்ள முருங்கபேட்டை பேருந்து நிழற்குடையாகும். தற்சமயம் பேருந்து நிழற்குடை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இடமாகும். திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் பெட்டவாய்தலை மார்க்கத்திற்கு செல்பவர்கள் சாலையின் தென்புறத்தில் இருந்து பேருந்தில் ஏறிச் செல்கின்றனர். வெயில், மழை காலங்களில் பெட்டவாய்தலை மார்க்கமாக செல்லும் பொதுமக்கள் சாலையின் வடபுறத்தில் அமைந்து இருந்த பேருந்து நிழற்குடையில் அமர்ந்து இருந்து பேருந்து வரும் சமயம் மீண்டும் சாலையை கடந்து தென்புறம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.  மேற்படி சாலையின் தென்புறம் ரயில் போக்குவரத்து இருப்பதால் அங்கு பேருந்து நிழற்குடை அமைக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே பேருந்து நிழற்குடை இருந்த இடத்திற்கு பொதுமக்கள் சாலையை கடக்க சில மணிதுளிகள் ஆனது. இதனால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து இல்லாமல் சாலையை கடந்து சென்றனர். தற்சமயம் புதிதாக பேருந்து நிழற்குடை அமைக்க உள்ள இடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டுமானால் சாலையை கடக்க கூடுதல் நேரம் ஆவதுடன் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, பொதுமக்கள் நலன்கருதி ஏற்கனவே இருந்த இடத்தில் பேருந்து நிறழ்குடை அமைத்து தருமாறு பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என கூறியிருந்தனர்.

திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் முகாம்

புதுக்கோட்டை, ஜன.6-  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. பின்னர், ஆட்சியர் கூறும்போது, இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 65 திருநங்கைகள் கலந்துகொண்டு, தங்களுக்கான வீட்டுமனைப் பட்டா, சிறுதொழில் கடன், ஆதார் திருத்தம், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கிட வேண்டி பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார். 

மாநகராட்சியுடன் இணைக்க கடும் எதிர்ப்பு:  திருச்சியில் பொதுமக்கள் சாலை மறியல் ஒருவர் தீக்குளிக்க முயற்சி 

திருச்சிராப்பள்ளி, ஜன.6-  திருச்சி, சென்னை உள்பட 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கப்படும் என அரசு அறிவித்து, அதன்படி திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர், குமாரவயலூர் ஆகிய ஊராட்சிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, திங்களன்று காலை திருச்சி அடுத்த சோமரசம்பேட்டையில் உள்ள ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.வீட்டிற்கு திரண்டு வந்தனர். 300 பெண்கள் உள்பட சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் அங்கு வந்து திரண்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் சோமரசம்பேட்டை போலீசார் வந்து பொதுமக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அவர்கள் திருச்சி வயலூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், தோகைமலையில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், திருச்சி – வயலூர் செல்லும் பேருந்துகள் என 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் மறியலில் சிக்கிக்கொண்டன. இதில் திருச்சிக்கு வேலைக்கு வருவோர், கல்வி நிலையங்களுக்கு வருவோர் வழக்கமாக வருவார்கள். அவர்களும் மறியலில் சிக்கி கொண்டு அவதிப்பட்டனர். இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசார் மறியல் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தாங்கள் ஊராட்சி மாநகராட்சியோடு இணைக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது வேனில் இருந்து சிலர் கீழே இறங்கியதால் காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், காலையிலேயே 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த சாலை மறியலால் பள்ளி கல்லூரி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர். மேலும், வயலூர் சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க இன்னும் 165 நாட்கள் அவகாசம் இருக்கிறது. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட லட்சுமணன் என்பவர் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். 

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட  குழாய்களை திருடிய 4 பேர் கைது

கும்பகோணம், ஜன.6-   கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் சுமார் 5.5 மீட்டர் நீளம் உடைய ரூ.6 லட்சம் மதிப்புடைய இரும்பு குழாய்களை திருடிய 4 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.  தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் காவல் சரகம் குடிகாடு கிராமம் புத்தூர் ரோடு கரையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து, நாகப்பட்டினம் செல்வதற்கான இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளபட்டு வருகிறது.  இந்நிலையில், இரும்புக் குழாய்கள் திருடு போயிருந்தது தெரியவந்ததை அடுத்து, கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறி்து காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, ஏற்கனவே காண்ட்ராக்ட் வேலை செய்துவந்த மன்னியார் வாழ்க்கை கிராமம் சதீஷ்குமார் என்பவரது தலைமையில், சுமார் 13 இரும்பு குழாய்களை திருடிய ஜெயங்கொண்டம் செல்வராஜ் மகன் ரஞ்சித் குமார், அரும்பாக்கம் படைவெட்டான் மகன் ராஜேஷ் மற்றும் சத்தியமங்கலம் ராயாவேலூர் குமரன் மகன் யுவராஜ் ஆகியோரைப் பிடித்து விசாரணை செய்தனர்.  விசாரணையில் அவர்களிடம் திருடப்பட்ட குடிநீர் குழாய் பணிக்காக வைத்திருந்த 3 இரும்பு குழாய்கள், திருட பயன்படுத்திய 2 ஈச்சர் லாரி, 1 ஜேசிபி வாகனங்கள் உட்பட கைப்பற்றபட்டு, திருடிய நான்கு நபர்களையும் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். 



 

\