districts

img

செங்கிப்பட்டி பகுதியில் ஒரு போக சாகுபடி செய்ய தண்ணீர் கிடைக்குமா?

தஞ்சாவூர், செப்.27 -  செங்கிப்பட்டி பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமல் கடந்தாண்டு சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டும் சாகுபடிக்கு இதுவரை தண்ணீர் வாய்க்கால்களில் வரவில்லை. இதனால் ஒரு போக சாகுபடியை தொடங்கலாமா என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வேதனையை வெளிப்படுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:  அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் மோசமாக உள்ளன. தலைமை அதிகாரியை சந்திக்க சென்ற விவசாயிகளை சந்திக்க மறுத்துள்ளார். இதனால் கரும்பு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இனி, சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்து பயிரிடுவதா வேண்டாமா என்ற நிலையில் உள்ளனர். ஆலையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்கள் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் மட்டும் கரும்பு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன். இந்தாண்டு கரும்பு அரவை பருவத்தை டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்க வேண்டும். கரும்புக்கான வெட்டுக்கூலியை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். செங்கிப்பட்டி பகுதியில் கடந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் ஒரு போக சாகுபடியை கூட செய்ய முடியவில்லை. இந்தாண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டும், இதுவரை புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் போதிய தண்ணீர் வரவில்லை. இதனால் ஏரி, குளங்கள் தண்ணீரின்றி, பாசனப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை. இந்தாண்டாவது ஒரு போக சாகுபடியை இந்த பகுதியில் மேற்கொள்ள முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் வேதனையோடு உள்ளனர். கல்லணைக் கால்வாய் ஆற்றில் கீழ்பகுதி, மேல்பகுதி என பிரித்துள்ளனர். இதில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டால் சுமார் 2 லட்சம் சாகுபடி கேள்வி குறியாகும், எனவே முறைப்பாசன முறையை கைவிட வேண்டும். ஒரத்தநாடு பகுதியில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது போதிய தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது.

எனவே கல்லணைக் கால்வாயில் முழுக் கொள்ளளவு தண்ணீரை ஒரு மாதத்துக்கு தொடர்ந்து திறக்க வேண்டும். சம்பா சாகுபடிக்கு போதிய விவசாயத் தொழிலாளர்கள் கிடைக்காமல், வடமாநிலத் தொழிலாளர்களை பயன்படுத்தும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, சம்பா சாகுபடி பணிகள் முடிவடையும் வரை, உள்ளூர் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக, மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். பயிர் காப்பீடு திட்டத்தில் கணக்கீடு செய்யும் முறையில் குளறுபடிகள் அதிகம் உள்ளதால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உரிய இழப்பீடும் கிடைப்பதில்லை. இதனால் தமிழக அரசே இந்த திட்டத்தை ஏற்று நடத்த வேண்டும். சோதனை அறுவடையை விவசாயிகள் முன்னிலையில் நடத்த வேண்டும். விளார் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள ரெடிமிக்ஸ் மற்றும் தார் கலவை தொழிற்கூடத்தை, மாவட்ட நிர்வாகத்தினர் கள ஆய்வு செய்ய வேண்டும். மாவட்டம் முழுவதும் தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் உரங்களின் விலைப்பட்டியல் வைக்க வேண்டும். அங்குள்ளவர்களுக்கு உரங்கள், பூச்சித் தாக்குதல் குறித்த பயிற்சியை வேளாண்மைத் துறை அவ்வப்போது வழங்க வேண்டும். திருவையாறு தாலுகா வெள்ளாம்பெரம்பூர் கிராமத்தில் ஏராளமான கால்நடைகள் உள்ளதால், கால்நடை மருந்தகம் திறக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் வலியுறுத்தினர். கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவ்வப்போது பதிலளித்து பேசினார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால் நீர்வளத்துறை பொறியாளர் கூறியதாவது:  இந்த இரண்டு வாய்க்கால்கள் மூலம் செங்கிப்பட்டி பகுதியில் 62 ஏரி, குளங்களில் தண்ணீர் நிரப்பி பாசனம் செய்ய முடியும். தற்போது ஏரி, குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் காமாட்சி ஏரி, மூங்கில்அடி ஏரி, அனைக்குடம் ஏரி ஆகிய மூன்று ஏரிகளில் மட்டும் தண்ணீர் திறக்கப்படவில்லை. மற்ற ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூரிலிருந்து நீர் வரத்துக்கு ஏற்றவாறு தண்ணீர் திறந்து விடப்படும் என்றார்.