districts

img

இலுப்பூர் - சங்கரன்பந்தலில் தென்னிந்திய அளவிலான ஆடவர்-மகளிருக்கான மாபெரும் கபாடி போட்டி துவங்கியது

மயிலாடுதுறை, பிப்.26 - மயிலாடுதுறை மாவட்டம் இலுப்பூர் - சங்கரன்பந்தலில் தென்னிந்திய ஆடவர் - மகளிருக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அரங்கத்தில் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டி துவங்கிய முதல் நாளான வெள்ளியன்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர். இலுப்பூர் - சங்கரன்பந்தல் விளையாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டியில் இந்திய அளவில் பிரபல நிறுவன அணிகளான துணை ராணுவ அணி, சென்னை ஐசிஎஃப், ரயில்வே அணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபல அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.  ரப்பர் ஆடுகளத்தில் நடைபெறும் போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெறுகிறது. போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன. 25 நடுவர்கள் பங்கேற்று போட்டிகளை நடத்துகின்றனர். ஆடவர் - மகளிர் முதல் போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் துவங்கி வைத்தனர். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.1 லட்சம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பரிசுதொகை வழங்கப்படுகிறது. துவக்க விழாவில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், தரங்கம்பாடி ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினிஸ்ரீதர், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் ஆசிக் ரஹ்மான், திமுக ஒன்றிய செயலாளர் அப்துல்மாலிக் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.