மயிலாடுதுறை, ஏப்.6 - மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சங்கரன்பந்தல் (இலுப்பூர்) தனியார் திருமண மண்டபத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வாயிலாக திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் 1,660 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.6.79 கோடி மதிப்பிலான நிதியுதவிகளை வழங்கினார். சங்கரன்பந்தல் (இலுப்பூர்) தனியார் திருமண மண்டபத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வாயிலாக ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழ் மீன் வியாபாரத்தில் ஈடுபடும் 25 மீனவ மகளிர் சுய குழுக்களுக்கு ரூ.18.75 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார். முன்னதாக மயிலாடுதுறை நாராயணப்பிள்ளைத் தெருவில், கூட்டுறவுத்துறை சார்பாக ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப்பட்டுள்ள மயிலாடுதறை நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை கட்டடத்தினை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சிகளில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.