மன்னார்குடி, நவ.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர 10 ஆவது மாநாடு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. மாநாட்டுக் கொடியை மூத்த தோழர் டி.ஜெகதீசன் ஏற்றினார். ஜி.ரகுபதி, வி.ஜெயந்தி தலைமை வகித்தனர். தியாக சிவசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.முருகையன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். பாதாளச் சாக்கடை தோண்டும் பணிகளை விரைவுபடுத்திட வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும். சிறப்பு திட்டங்களின் மூலம் திருமக்கோட்டை சாலை, மதுக்கூர் சாலை, தெப்பக்குளம் வடகறையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் குடியிருப்புகளை, மறு கட்டுமானம் அல்லது புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 9 பேர் கொண்ட புதிய நகரக் குழுவும், அதன் செயலாளராக ஜி.தாயுமானவனும் தேர்வு செய்யப்பட்டனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றினார்.