புதுக்கோட்டை, டிச.15 - கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள 76 வீடுகள் சேதமடைந்தன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழை காரணமாக தாழ்வான குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டங்களில் கடலோரம் உட்பட தாழ்வான குடியிருப்பு பகுதியில் வசித்த 1,000 பேர் 20 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் மாவட்டத்தில் 76 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்ததால் போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. ஆவுடையார்கோவில் - ஏம்பல் சாலையோரம் உள்ள கண்மாய்கள் நிரம்பி, சாலையில் மழைநீர் வழிந்தோடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீர்வளத் துறை கண்காணிப்பில் உள்ள 961 கண்மாய்களில் 138 கண்மாய்கள் முழுமையாக நிரம்பின. மேலும், 119 கண்மாய்களில் 75 சதவீதமும், 122 கண்மாய்களில் 50 சதவீதமும், 252 கண்மாய்களில் 25 சதவீதமும், 330 கண்மாய்களில் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் சாகுபடி பணிகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களும் பெரும் சிரமத்தக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மழை பாதிப்புகளை ஆய்வு செய்து, உரிய நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து ஆவுடையார்கோவில் வட்டாட்சியர் மார்ட்டின் லூதர் கிங் கூறுகையில், “ஆவுடையார்கோவில் வட்டத்தில் பல கண்மாய்கள் முழுமையாக நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகிறது. சில கண்மாய்களில் உபரிநீரின் அளவைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளது. தொடர்ந்து, மற்ற கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கண்மாய் கரைகளில் உடைப்பு நேரிடாத வகையில், சம்பந்தப்பட்ட பகுதி பாசனதாரர்கள், அதிகப்படியான உபரிநீரை மடைகளைத் திறந்து வெளியேற்றிக் கொள்ளலாம். கலிங்குகளை மணல் மூட்டைகளைக் கொண்டு அடைக்கக் கூடாது. மடைகளைத் திறப்பதில் சிரமம் இருந்தால், நீர்வளத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.