திருவாரூர், பிப்.8- திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின மாவட்ட அளவிலான கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பி.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர்கள் எம்.ராணி வி.விஜயன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றினர். நிகழ்ச்சியில் குழந்தைகளோடு விஞ்ஞானி சந்திப்பு நிகழ்வில் இந்திய ராணுவத்துறை விஞ்ஞானி முனைவர் வி.தில்லி பாபு கலந்துகொண்டு மாணவர்களோடு உரையாடி, மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் உரைத்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட இணைச் செயலாளர்கள் கோ.பிளாட்டோ, பி.விஜய், அ.அகிலன் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் துவக்கத்தில் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் முத்துராஜா வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஜி. காந்திராஜன் நன்றியுரை கூறினார். திருவாரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 155 செய்முறை மாதிரிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன அவற்றிலிருந்து 30 மாதிரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட பகுதியில் இருந்து மொத்தம் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.