districts

img

திட்டப் பணி நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா?

அரியலூர், அக்.18 - ஜெயங்கொண்டம் நகராட்சி ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுக்கிற பணத்தை முறையாக செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்காத எம்எல்ஏ உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகளை கண்டித்தும், 15 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செந்துறை வட்டச் செயலாளர் கு.அர்ச்சுனன் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பேசினர்.  ஜெயங்கொண்டம் ஆவேரி ஏரியில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை அமைக்க வேண்டும். வார்டுக்கு ஒரு ரேசன் கடை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நகராட்சியில் சுகாதாரமான மற்றும் முறையான குடிநீர் வழங்க வேண்டும். வடிகால் வாய்க்கால்களை விரைந்து கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.  வடிகால் அமைக்கும் பணி  2 ஆண்டாக கிடப்பில்... பின்னர் செய்தியாளர்களிடம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா தெரிவிக்கையில், “ஜெயங்கொண்டத்தில் உள்ள ஆவேரி ஏரி நடைபாதை அமைக்க ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நடைபாதை அமைக்காமல் ஒரு பக்கத்தில் மட்டும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, கடந்த 2 ஆண்டுகளாக பணி மேற்கொள்ளாமல் தீபாவளி நெருங்கி வரும் நேரத்தில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணியை செய்வது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. நகராட்சி முழுவதும் முறையான மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்கப்படுவதில்லை.  நகராட்சி ஒப்பந்தக்காரர்களுக்கு பல்வேறு பணிகளுக்காக கொடுக்கும் பணத்தை முறையாக செலவு செய்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நகராட்சி நிர்வாகத்திடம் உள்ளது. அதனை முறையாக செலவு செய்யாமல், கையாடல் செய்வதை கவனிக்க தவறிய நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதை கவனிக்கத் தவறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.