அரியலூர்/கும்பகோணம், டிச.26 - மாநில அளவிலான உடற்கல்வியியல் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டியில் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்தனர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் மற்றும் பெண்கள் நெட்பால் போட்டிகள், பெண்களுக்கான ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டன. இதில் ஆண்கள் நெட்பால் போட்டியில் திருச்சி ஜென்னிஸ் கல்லூரி முதலிடத்தையும், தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்லூரி இரண்டாமிடத்தையும், சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி மூன்றாமிடத்தையும், நாமக்கல் செல்வம் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். பெண்கள் நெட்பால் போட்டியில் தத்தனூர் மீனாட்சி உடற்கல்வியியல் கல்வியியல் கல்லூரி முதலிடத்தையும், சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி மூன்றாமிடத்தையும், நாமக்கல் செல்வம் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றன. பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் முதலிடத்தையும், சென்னை ஒய்எம்சிஏ கல்லூரி இரண்டாமிடத்தையும், சேலம் சாரதா கல்லூரி மூன்றாமிடத்தையும், புதுக்கோட்டை மதர் தெரசா கல்லூரி நான்காமிடத்தையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி தாளாளர் ரகுநாதன் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார். கும்பகோணம் அரசு கல்லூரி மாணவர்கள் சாதனை திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலை கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று பரிசுகளை பெற்றனர். நவ.28 அன்று ஜே.ஜே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகளில், 45-48 எடை பிரிவில் இளநிலை 3 ஆம் ஆண்டு விலங்கியல் துறை மாணவி சௌந்தர்யா மூன்றாமிடமும், 63-66 எடை பிரிவில் இளநிலை 3 ஆம் ஆண்டு புள்ளியியல் துறை மாணவி வைசாலி மூன்றாமிடமும் பெற்றனர். டிச.2, 3 தேதிகளில் திருச்சி அண்ணா கலையரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் முதுநிலை இயற்பியல் துறை 2 ஆம் ஆண்டு மாணவர் செல்வவிநாயகம் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்றார். மேலும், டிச.18 அன்று மஞ்சக்குடி சுவாமி தயானந்தா மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பெண்களுக்கான வலைப்பந்து (NETBALL) போட்டியில், மாணவிகள் 4 ஆம் இடமும் பெற்ற நிலையில், இளநிலை 3 ஆம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவி நிவேதிதா பல்கலைக்கழக வலைப்பந்து அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று கும்பகோணம் அரசினர் கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவியர்களைக் கல்லூரி முதல்வர் அ.மாதவி பாராட்டினார்.