மயிலாடுதுறை, பிப்.4- மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரம் ஆறுபாதி, பரசலூர், மடப்புரம், கிடாரங்கொண்டான், மேலப்பெரும்பள்ளம் ஆகிய ஊராட்சிகளில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்து 350 பயனாளிகளுக்கு ரூ.51 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பல்வேறு இடங்களில் இந்த முகாமில் கலந்து கொண்டு, இங்கு இந்த மயிலாடுதுறை மாவட்டத்திலும் அனைத்து அலுவலர்களும் மக்களின் மனுக்களை பெற்று, அதற்கான தீர்வுகளையும் 15 தினங்களுக்குள் தீர்வு காணப்பட உள்ளது என என உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் உரையாற்றினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற அரசு விழாவில் தகுதியான பயனாளிகளுக்கு ரூ.15 கோடி மதிப்பில் 2039 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 2000 வீட்டுமனை பட்டாக்கள் தயார் நிலையில் உள்ளது. இப்பகுதியில் நீர் மாசுபாடு இருப்பதன் காரணத்தை அறிந்து அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு, முதல்வர், ரூ.53 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் ரூ.30 கோடி மதிப்பில் பைப் லைன் அமைப்பதற்கும், இதுவரை எந்த இடத்திலும் அமைக்காத அளவிற்கு நீர் சுத்திகரிப்பு நிலையம் ரூ.23 கோடி மதிப்பில் அமைப்பதற்கான அனுமதியையும் தந்து இன்னும் இரண்டொரு தினங்களில் அந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் பகுதியில் விரைவில் ரூ.40 இலட்சம் மதிப்பில் ஒரு மிகப்பெரிய சமுதாயக்கூடம் கட்டப்பட உள்ளது. தினந்தோறும் மக்களின் பிரச்சனைகளை பற்றி கேட்டறியப்பட்டு, அவற்றிற்கு தீர்வு காணப்பட்டு வருகின்றது என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், 90 பயனாளிகளுக்கு பட்டா நகல்களையும், 50 நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட அடையாள அட்டையையும், 60 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டையையும், 60 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்களையும், வேளாண்மைத்துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு மரக்கன்றுகளையும் அமைச்சர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம், மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, மீனா, வட்டாட்சியர் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.