திருச்சிராப்பள்ளி, பிப்.4- திருச்சி புறநகர் மாவட்டம் புள்ளம்பாடி யூனியன் சாலையில் குடியிருந்து வரும் நபர்களின் வீட்டை இடிக்க கூறி பலமுறை தொந்தரவு செய்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 ஆண்டு காலமாக அரசு புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் நபர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தியும், குடியிருப்போரை அப்புறப்படுத்த துணை போகும் நபர்களை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று புள்ளம்பாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் அருமைதாஸ் தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன், ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினர் வினோத்குமார் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் நாகராஜ், கிருஷ்ணகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர், காவல்துறையினர் தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தி, இதற்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.