districts

img

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: பெரும் ரயில் விபத்து தடுத்து நிறுத்தம்

கரூர், பிப்.11- கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே, கரூர் - திருச்சி செல்லும் ரயில் பாதையில் தண்டவாள விரிசல் ஏற்பட்டு உடைந்துள்ளது. ரயில் பாதை அருகில் குடியிருந்து வரும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் கலியமூர்த்தி என்பவர், காலையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து வாய்க்காலுக்குச் செல்லும்போது ரயில் தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதை  பார்த்துள்ளார். உடனடியாக இருப்பு பாதை சரி பார்க்கும் ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை பார்வையிட்டனர். இந்த தண்டவாளத்தில் ரயில் சென்றால் பெரும் விபத்து ஏற்படும் என தெரிந்து கொண்டனர். கேரளா மாநிலம் எர்ணாகுளம் முதல் காரைக்கால் வரை செல்லும் காரைக்கால்   எக்ஸ்பிரஸ் ரயில் கரூர் ரயில்வே நிலையத்தில் இருந்து கிளம்பி திருச்சி நோக்கி, விரிசல் ஏற்பட்டுள்ள தண்டவாள பாதையில் வந்து கொண்டிருந்தது. இதனை அறிந்த ரயில்வே ஊழியர்கள், சிவப்பு கொடியை அசைத்து தண்டவாள விரிசல் ஏற்பட்டுள்ள இடத்திற்கு 100 மீட்டர் தூரத்தில் காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரயிலை  நிறுத்தினர்.  இதனால், நடக்க இருந்த பெரும் ரயில் விபத்து தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் வாஸ்கோடகாமா முதல் வேளாங்கண்ணி வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மாயனூர் ரயில் நிலையத்திலும், ஈரோடு - திருச்சி பாசஞ்சர் ரயில் பாதி வழியிலும் நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை உடனடியாக சரி செய்தனர். இதனால், அனைத்து ரயில்களும் சுமார் ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றன.