districts

தென்னகப் பண்பாட்டு மையத்தில் இன்று கோடை விழா தொடக்கம்

தஞ்சாவூர், ஜூன் 20 -

     தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையத்தில், கோடை  விழா புதன்கிழமை (ஜூன் 21) தொடங்கி ஜூன் 25 அன்று  வரை நடைபெறவுள்ளது.

    இதுகுறித்து மையத்தின் இயக்குநர் கே.கே.கோபால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

   தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மைய வளாகத்தில் புதன்கிழமை காலை 7 மணியளவில் உலக யோகா நாள்,  உலக இசை விழா நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து,  மைய வளாகத்தில் மாலை 6.30 மணிக்கு கோடை விழாவை  தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தொடக்கி வைக்கிறார்.

    இந்த விழா தொடர்ந்து ஜூன் 25 ஆம் தேதி வரை தினமும்  மாலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.  இதே நாள்களில் பாபநாசம் மேல வீதி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப் பள்ளி (வித்யா பாடசாலை), மயிலாடுதுறை ஏ.வி.சி. மைதானம் எதிரேயுள்ள திருமண மண்டபம், திருச்சி கலைக்காவேரி கவின் கலைக் கல்லூரி, பெல் வளாகம் ஆகிய 4 இடங்களிலும் கோடை விழா நடை பெறவுள்ளது.

   இவ்விழாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா, கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தர காண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 400 கலை ஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தவுள்ளனர்.  

    மேலும், பல்வேறு மாநில கைவினைக் கலைஞர்களின் பொருட்காட்சி மற்றும் உணவுத் திருவிழா தினமும் மாலை 4  மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.

வாராந்திர கலை விழா

    இந்த மைய வளாகத்தில் மே 12 அன்று முதல் வாரந்  தோறும் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வாராந்திர  கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மற்றும்  அதனைச் சுற்றியுள்ள கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தஞ்சாவூர் நகர மற்றும் கிராமப்புற மக்க ளின் கலை ஆர்வத்துக்கு ஊக்கம் அளிக்கவும் இவ்விழா  நடத்தப்படுகிறது. நிகழாண்டு சலங்கை நாத விழா வரு கிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

   நிர்வாக அலுவலர் சீனிவாசன், அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உடனிருந்தனர்.