திருச்சிராப்பள்ளி, ஆக.11 - நீட் எதிர்ப்பு போராளி அரியலூர் அனிதா நினைவு தினமான செப்டம்பர் 1 ஆம் தேதி நீட் எதிர்ப்பு மாரத்தான் திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் மற்றும் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் ஞாயிறன்று திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காசி, சமூக ஆர்வலர் எஸ்.ஸ்ரீதர், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் லெனின், மாவட்டச் செயலாளர் சேதுபதி, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்டத் தலைவர் சூர்யா ஆகியோர் பேசினர். பின்னர் டாக்டர் காசி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனிதாவின் தற்கொலைக்கு நீட் தான் காரணம். அனிதாவின் மரணம் தமிழ்நாட்டில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியது. நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாயின. இதன் பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பல மாணவர்கள் நீட் தேர்வினால் உயிரிழந்துள்ளனர்.
அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, சுமார் 16-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 அன்று இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. சுமார் 4,750 தேர்வு மையங்களில் 24 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். அப்போதே சில தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்திருப்பதாகவும், மறுதேர்வு நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4 அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அவசரமாக அறிவிக்கப்பட்டது.
அப்போதே தேர்தல் நடத்தும் தேசியத் தேர்வு முகமை (National Testing Agency-NTA) மீது பலருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, வெளியான நீட் தேர்வு முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. அதாவது, நீட் தேர்வு வரலாற்றிலேயே இல்லாத வகையில், சுமார் 67 மாணவர்கள் 720/720 முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கின்றனர். இதுவரை நடந்த கடந்த கால தேர்வுகளில் ஒன்றிரண்டு பேர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறார்கள்.
மேலும், முதலிடம் பெற்றவர்களில் பெரும்பாலான மாணவர்கள் முழுமையான மதிப்பெண் பெற்றதே இல்லை. கடந்த முறை தேர்வுகளை விட இந்தத் தேர்வு மிகவும் கடினம் என்று மாணவர்கள் சொல்லும் நிலையில், எப்படி 67 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்கள் என்ற கேள்வி வலுவாக எழுந்திருக்கிறது. அதில், 6 மாணவர்கள் ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி, ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்.
அதேபோல, வினாத்தாள் கசிந்ததாக குற்றம் சாட்டப்படும் ராஜஸ்தானில் மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பது மாணவர்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. 2024 நீட் தேர்வு முடிவுகள், மாணவர்களை வஞ்சிப்பதாகவும், அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதாகவும் அமைந்துள்ளது.
நீட் தேர்வு, மாணவர்களின் தகுதியையும் திறமையையும் உயர்த்தும் என்றும், ஏழை-எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் முன்னுரிமை வழங்க உதவிடும் என்ற வகையில் கொண்டு வரப்பட்ட அதன் நோக்கம் முற்றிலும் சிதைக்கப்பட்டு உள்ளது. பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் (18 சதவீதம் ஜிஎஸ்டி வரி உள்பட) கட்டி படிக்கும் வசதி படைத்த மாணவர்கள் மட்டுமே இன்று நீட் தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளனர். கல்வி தனியார்மயம் என்பது நீட் தேர்வின் மூலமாக புகுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை வேகமாக அமலாக்குவதோடு, கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்றிருப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது.
இதனால் மருத்துவம், சேவை என்ற நிலையில் இருந்து பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறியுள்ளது. இதன் விளைவாக, ஏழை-எளிய மக்களுக்கு உரிய மருத்துவம் கிடைக்காத சூழல் ஏற்பட்டு ஏராளமான உயிரிழப்புகளை சந்திக்கும் நிலை ஏற்படும்.
ஆகவே நீட் எனும் அரக்கனை ஒழிப்பதற்காக மாணவர்கள் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாக, செப்.1 அன்று அனிதாவின் நினைவு தினத்தில் திருச்சியில் மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர்கள் அரங்கம், இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) இணைந்து மினி மாரத்தான் ஓட்டத்தை நடத்த உள்ளன. இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர். நீட் தேர்வுக்கு எதிரான மனப்பான்மை கொண்டோரை பங்கேற்க அழைக்கிறோம்” என்றார்.