கும்பகோணம், ஜூன் 8- கும்பகோணம் அருகே குடிதாங்கியில் அமைந்து ள்ள கொள்ளிடம் ஆற்றங் கரையிலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடி தண்ணீர் குழாய் மூலமாக கும்பகோணத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் புளியஞ்சேரி- இன்னம்பூர் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக அருகில் உள்ள பாசன வாய்க்காலில் நீர் வீணாகி செல்கிறது. இப்பகுதியில் அமைந்துள்ள இன்னம்பூர் எழுத்தறிநாதர் கோவில், திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். அப்பொழுது இரவு நேரங்களில் சரியான மின் விளக்கு வசதி இல்லாததால் குடிநீர் குழாய் உடைந்த இடத்தில் வாகனங்கள் தடுமாறி செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியினர் பனை ஓலைகளை அவ்விடத்தில் சொருகி வைத்து அடையாளம் காட்டியுள்ளனர். கோடை காலமான தற்பொழுது தண்ணீர் தேவைக்கு கஷ்டப்படும் நிலையில் இவ்வாறு குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மாநகராட்சி இதனை கவனத்தில் எடுத்து உடனே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் உடைந்துள்ள குழாயை சரிசெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.