districts

img

தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றம்

தஞ்சாவூர், நவ.12 -  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அறுவை சிகிச்சை மூலம் சனிக்கிழமை அகற்றப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருவையாறு வட்டம் இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த மகா அபிலேஷ் பேகம் சில ஆண்டுகளாக வயிறு பெரிதாக இருப்பதாகவும், அதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் உதவித்தொகை அளிக்குமாறும் கோரி மனு அளித்தார். இதைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் உடனடியாக மாவட்ட சமூக நல அலுவலர்களிடமும், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர். பாலாஜிநாதனிடமும் தொடர்பு கொண்டு அப்பெண்ணுக்கு பரிசோதனை செய்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து, அப்பெண் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவருக்கு வயிற்றில் கட்டி, ரத்த சோகை இருப்பதும் தெரிய வந்தது.  பல கட்ட மருத்துவ ஆலோசனைக்கு பிறகு மகா அபிலேஷ் பேகத்துக்கு ரத்தம் ஏற்றப்பட்டு, சனிக்கிழமை (நவ.9) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அவரது வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி அகற்றப்பட்டது. பின்னர், மகா அபிலேஷ் பேகம் நலமுடன் இருப்பதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.