தஞ்சாவூர், டிச.5- திருவாரூர் மாவட்டம் காரியமங்கலத்தைச் சேர்ந்த சாருலதா என்பவர் அளித்த தக வலின்படி, தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தின் தமிழ்ப் பண்டிதரும் வரலாற்று ஆய்வாளருமான முனைவர் மணி.மாறன், பொந்தியாகுளம் அரசு தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முனைவர் கோ.தில்லை கோவிந்தராஜன், சக்கராப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கோ. ஜெயலெட்சுமி ஆகியோர், கள ஆய்வு மேற்கொண்டனர்.
இவ்வூரில் முற்றிலும் சிதைந்து இடிபாடுற்று இருந்த பழைய கோயில் இருந்த பகுதியில் புதிய சிவாலயம் எழுப்புவதற்காகக் குழி தோண்டியபோது சோழர்கால உறைக்கிணறு கண்டறியப்பட்டது. பின்னர் 11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தைச் சேர்ந்த நின்ற கோலத்தில் முருகன் சிற்பம் மற்றும் கோயில் கோஷ்ட மாடப் பகுதியில் அமைந்திருக்கும் தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் காணப்படும் சனகாதி முனிவர்களின் சிற்பங்கள் கண்டெடுக்கப்பெற்றது.
சோழர் காலத்தைச் சேர்ந்த கோபுரக் கலசக் கல் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. கலசக்கல் முற்கால சோழர் காலத்தைச் சார்ந்தது. அதேபோன்று கோயிலுக்கு நேர் எதிரே உள்ள வயல்வெளியில் சோழர் காலத்தைச் சார்ந்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளின் சிறுசிறு உடைந்த துண்டுகளும் காணப்பட்டது. காரியமங்கலம் அருகாமையில் உள்ள ஊர்களையும் அதன் வரலாற்றுப் பின்புலத்தையும் திருத்துறைப்பூண்டி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காரி கம்பத்தடிகளான நீதிசுந்தர பேரரையன் என்ற செய்தியில் காரி என்ற பெயரை, இவ்வூர் சோழர்கள் மற்றும் பின்வந்த பாண்டியர்கள் காலத்திலும் சிறப்புற்றுத் திகழ்ந்திருக்க வேண்டும் என்பதால், இதன் காரணமாகவே இப்பகுதிகளில் பாண்டியர் கால கல்வெட்டுகள் காணப்படுகிறது.