districts

உயர்கல்வித் துறையைக் கண்டித்து கல்லூரி பேராசிரியர்கள் போராட்டம்

தஞ்சாவூர், அக்.11 - தமிழக அரசுக் கல்லூரி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணிபுரியும் 10 ஆயிரம் பேராசிரியர்களுக்கு, 8 ஆண்டுகளாக பணி மேம்பாட்டுத் தொகை வழங்கப்படவில்லை.  இதுகுறித்து தொடர் போராட்டங்கள் நடத்திய நிலையில், 2021 ஜனவரி 11 இல் கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களின் பணி மேம்பாட்டுக்கான அரசாணையை உயர் கல்வித் துறை வெளியிட்டது.  இதை அமல்படுத்துவதற்காக கல்வி இயக்குநரின் வழிகாட்டு நெறிமுறைகள் 2021 மே 4-ல் வெளியிடப்பட்டன. ஆனால் இதுவரை கல்லூரி ஆசிரியர்களுக்கு எந்த ஒரு ஊதிய ஊக்கத்தொகையும், பணி மேம்பாட்டு தொகையும் வழங்கப்படவில்லை.  மேலும், கடந்த நான்காண்டுகளாக ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. கல்லூரி ஆசிரியர்களுக்கு முனைவர் பட்டத்திற்கான உயர்கல்வி ஊக்கத் தொகையும் வழங்கப்படவில்லை. இதையடுத்து மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார், அன்னை தெரசா, அழகப்பா பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர் சங்கம், அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இணைந்து, இணை பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாடு தொடர்பான அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும்.  எம்ஃபில்., பி.எச்.டி., ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என வலியுறுத்தி, அக்.11 (செவ்வாய்) அன்று அனைத்து அரசு கல்லூரிகளிலும் வாயில் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி முன்பு, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற வாயில் முழக்கப் போராட்டத்திற்கு, குந்தவை நாச்சியார் அரசுக் கல்லூரி கிளைத் தலைவர், முனைவர் பேராசிரியர் வெ.சுகுமாரன் தலைமை வகித்தார். செயலாளர் முனைவர் பெரியநாயகி, பொருளாளர் முனைவர் கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி முன்பு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பில் வாயிற் முழக்க போராட்டம் சங்கத்தின் மாநில பொருளாளர் முனைவர் ஏ.சேவியர் செல்வக்குமார் தலைமை வகித்தார். 
கல்லூரி கிளை செயலாளர் பேரா.ஷீலா எட்வர்டு முன்னிலை வகித்தார்.