தஞ்சாவூர், ஜூலை 27- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை தலைமைத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரச் செயலாளர் சி.ராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் கஸ்தூரி, மாவட்டப் பொருளாளர் மோகன் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் கண்டன உரையாற்றினார்.
பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.மேனகா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.
கும்பகோணம்
கும்பகோணம் தலைமை தபால் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் பழ.அன்புமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாபநாசம், திருவிடைமருதூர், வடக்கு-தெற்கு திருப்பனந்தாள் ஒன்றியங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் மற்றும் அகில இந்திய மாற்றுத்திறனாளிகளின் தேசிய மேடை சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் டி.கணேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன், தரங்கம்பாடி ஒன்றியச் செயலாளர் டி.கோவிந்தசாமி, சீர்காழி செயலாளர் ஆர்.நாகராஜன் உள்ளிட்ட பலர் விளக்கிப் பேசினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போருக்கான நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சண்முகம் கண்டன உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி நகரத் தலைவர் பாஸ்ஷாபாய், செயலாளர் ரமேஷ் மற்றம் நிர்வாகிகள் பேசினர்.