சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே பள்ளி மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் எட்டி உதைத்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆசிரியரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் கௌத்தூர் நிர்மலா மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை மாணவர்களை ஷூ காலால் எட்டி உதைக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மாணவர்களை கண்ணியக் குறைவாக நடத்தக்கூடாது இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது தகுதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்து இருந்தார்.
உடற்கல்வி ஆசிரியர் மாணவனை ஷூ காலால் எட்டி உதைத்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆசிரியரின் செயலுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்ட குழு சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.பவித்திரன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.