திருவள்ளூர், டிச 13- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகிலுள்ள நல்லூர் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்கடந்த 20 ஆண்டுகளாக அப்பளம் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மழையின் காரணமாக பணிகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் வருமானம் இழந்து, வீட்டு வாடகையை கூட செலுத்த முடியாமல் வறுமையில் வாடுகின்றனர். தற்போது உணவிற்கு வழியில்லாமல் வாடும் அப்பள தொழிலாளர்களுக்கு உடனடியாக உணவு பொருட்கள் உட்பட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சோழவரம் பொதுதொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர் மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்மூலம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதில் சிஐடியு மாவட்ட துணை தலைவர் நடேசன், சோழவரம் வட்டார பொது தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஏ.நடராஜன், செயலாளர் கே.நடராசன், அப்பள தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் டி.சி.சுரேஷ், செல்லம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.