districts

5 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

ஆம்பூர், மார்ச் 1- ஆம்பூரில் தெருவில் விளையாடிய 5 குழந்தைகளை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஆம்பூர் நகராட்சியில் பஜார் வீதி பிலால் நகர் உட்பட நகரம் முழுவதும் நாய்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சுதந்திரமாக தெருக்களில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் குழந்தைகள் விளையாட முடியாமலும், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு  வருகின்றனர். மேலும் வாகனங்களில் செல்வோரை நாய்கள் துரத்தி செல்வதால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். இதனால் நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை பிலால் நகரில் சாலையில் நடந்து சென்ற சிறுவர், சிறுமிகளை நாய்கள் விரட்டிச் சென்று கடித்தன. இதில் 5 சிறுவர், சிறுமிகள் காயமடைந்தனர். இதையடுத்து பெற்றோர் குழந்தைகளை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆம்பூரில் அதிகரித்து வரும் நாய் தொல்லையால் அப்பகுதி மக்கள் தெருக்களில் நிம்மதியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.