சென்னை,ஜன.14- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டட அனுமதிக்கு மாறாக விதிமீறி கட்டுமானம் நடைபெற்ற 1124 இடங்களில் கட்டுமானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியில் குறிப்பிடப்படாத, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் கண்டறியப்பட்டு கட்டட உரிமையாளர்களுக்கு குறிப்பாணை வழங்கப்படும். மேலும், தகுந்த விவரங்கள் மற்றும் போதிய ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட கட்டடத்தை மூடி சீல் வைக்க குறிப்பாணை வழங்கப்பட்டு, குறிப்பிடப்பட்ட காலக்கெடுவிற்கு பிறகு மாநகராட்சி அலுவலர்களால் மூடி சீல் வைக்கப்படும். அதனடிப்படையில், 15 மண்டலங்களிலும் ஜன.1 முதல் 11 வரை சம்பந்தப்பட்ட பொறியாளர்களின் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அனுமதிக்கு மாறாக விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள மற்றும் கட்டட அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமான இடங்களில் 327 உரிமையாளர்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்தவும், 181 உரிமையாளர்களுக்கு கட்டுமான இடம் பூட்டி சீல் வைக்கப்படும் என குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது.