கள்ளக்குறிச்சி, அக்.17 - கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வது மாநாடு வாணாபுரம் பகண்டை கூட்டு சாலையில் நடைபெற்றது. செங்கொடியை பி.ஜெய பாலன் ஏற்றி வைத்தார். மாநாட்டிற்கு டி.சாமிநாதன் தலைமை வகித்தார். கே. உத்தர குமார் வரவேற்றார். ஒன்றிய செயலாளர் வை.பழனி வேலை அறிக்கையையும், எம்.சி.ஆறுமுகம் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கே. பூவராகவன், மாவட்டக் குழு உறுப்பினர் ச.சசிக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில் மாநாட்டை முடித்து வைத்து பேசினார். புதிய ஒன்றியக்குழு 13 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு செயலாளராக வை.பழனி தேர்வு செய்யப்பட்டார் தீர்மானங்கள் வாணாபுரம் தாலுகாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க சிப்காட் தொழிற்சாலை அமைக்க வேண்டும், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் சாகுபடி செய்யப்படும் கரும்பு, பருத்திக்கு கட்டுபடியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.